Monday, December 10, 2012

புத்தகக் கண்காட்சி வந்தாச்சு!!!


புத்தக விரும்பிகளின் தீபாவளியாகக் கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி இதோ இந்தா வந்தாச்சு. சின்ன வயசுல தீபாவளிக்கு சரியா ஒருமாசம் இருக்குறப்பவே அதற்கான எதிர்பார்ப்பும் சந்தோசமும் மனசுல தொடங்கிரும். அதுமாதிரிதான் இந்த புத்தகக் கண்காட்சி எனக்கு.



இந்த வருடம் 36-வது கண்காட்சி ஜனவரி 11 முதல் 23 வரை நடக்கப்போகுதாம். மேலதிக தகவல்களுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமான (BAPASI) இணையதளத்தில் பார்வையிடவும்.

என்னமாதிரி ஞாபகமறதிக்காரர்களுக்கும் புதியவர்களுக்கும் சிலவற்றை ஞாபகப்படுத்ததான் இந்தப்பதிவு.

1. பொதுவாக அவ்வருடத்திய "ஹிட்" புத்தகத்தையும், பொன்னியின் செல்வன் போன்ற எளிதாக கிடைக்கும் புத்தகங்களையும் கடைசியாக வாங்கவும். இந்த கண்காட்சில வாங்கத்தவறிட்டாலும் எளிதாக வெளியே கிடைக்கும். முன்னப்பின்ன பலத்த சிபாரிசில்லாத புத்தகத்த வாங்குறதுங்கறது முதல்நாள் முதல்ஷோ டிக்கெட் புக் பண்ணி ஒரு படத்த பார்க்குறமாதிரி... மொக்கைன்னா நாம காலி. பீ கேர்ஃபுல்.

2. சனி & ஞாயிறுல போகலாம், வாரநாட்கள்ல வேண்டாம்ன்னு நினைச்சீங்கன்னா ரொம்ப தப்பு. எல்லாரும் இதே எண்ணத்துலதான் அந்த ரெண்டுநாட்கள்ல வந்து, அடுத்து வர்றதுக்கே யோசிக்கிற அளவுக்கு 'டரியல்' ஆகிடறாங்க. அவ்வளவு கூட்டம்.

3. சென்ற வருடம் என்னால முதல்நாள் போகமுடியல. ஆனா போன நண்பர்களுக்கு பெரும் ஏமாற்றம். அன்றுதான் புத்தகம் அடுக்கும் வேலையே தொடங்கிருந்தாங்க பெரும்பான்மையான பதிப்பகங்கள். So அன்றைய நாளை வேடிக்கைக்கு பயன்படுத்திக்கலாம். :-)

4. ஒருமுறை போனால் போதும்ன்னு ஏதாவது எண்ணம் இருந்தா மாத்திக்கோங்க ப்ளீஸ். முடிஞ்ச அளவுக்கு ஒருநாள் முழுக்க "விண்டோ-ஷாப்பிங்" பண்ணி எந்தெந்த பதிப்பகங்கள் இருக்கு என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம்ன்னு ஒரு பட்டியல் தயார் பண்ணுங்க. ஒரு முறைக்குமேல் செல்லமுடியாதவர்கள் எனில் பிரச்சினையில்லை. முன்கூட்டியே திட்டமிடலோடு சென்று வரலாம். போன வருடம் (கிட்டத்தட்ட எல்லா வருடங்களும்) தாறுமாறா விற்பனையான பொன்னியின் செல்வன் ஆயிரம் ரூபாய்க்கு மேல சில பதிப்பகங்கள்ல விற்பனையான அதே நேரத்தில் மலிவுவிலை பதிப்பு ரூபாய் 200-க்கு கிடைச்சது. காஸ்ட்லி பதிப்பகங்களான உயிர்மை & காலச்சுவடு செல்லும் முன் விசா, மீனாட்சி பதிப்பகங்களை ஒரு முறை பார்வையிடுதல் உங்கள் பட்ஜெட்டுக்கு உதவலாம். தேடுங்க பாஸ். சிக்கனப்படுத்தலாம்.

5. மாலை 6 மணியளவில் தினம் ஓர் எழுத்தாளர் என வாசகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சென்ற வருடத்திலிருந்து தொடங்கியுள்ளது. மிஸ் பண்ணிடாதீங்க. ரொம்பவே இணக்கமான சந்திப்பா இது இருக்குது. சென்றமுறை இந்நிகழ்ச்சியை திறம்படத்தொகுத்து உதவி செய்த ஞானி அவர்களுக்கு இந்நேரம் நன்றிகள். வெளியரங்கில் தினமும் மாலை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பல்வேறு பிரபலங்கள் கலந்துக்குவாங்க. முடிஞ்சவரை உங்களுக்கு பிடிச்ச பிரபலம் கலந்துக்குற அன்னைக்கு கண்காட்சிக்கு வர திட்டமிடலாம். ஒரே கல்ல ரெண்டு மாங்கா. :-)

6. முதல்வேலையா என்னென்ன புத்தகங்கள் வாங்கப்போறோம்ன்னு ஒரு பட்டியல் தயார் பண்ணுங்க. புத்தகம் எந்த பதிப்பகத்த சேர்ந்ததுன்னு இணையத்துல தேடி குறிச்சு வச்சுக்கோங்க. ஏன்னா கண்காட்சில பதிப்பகத்த கண்டுபிடிக்கறதே சிலநேரம் கஷ்டமா இருக்கும்.

7. நுழைஞ்சவுடனே பதிப்பகவாரியா ஸ்டால் எண்கள் பட்டியல் இருக்கும். நேர விரையத்த தவிர்க்க விரும்பினால் குறிப்பிட்ட பதிப்பகங்களுக்கு மட்டும் நேரடியா செல்லலாம்.

8. போனதடவ கண்காட்சிக்கு வந்தவங்க அதிகம் பேசியது. சாப்பாடு விலையெல்லாம் ரொம்பவே ஜாஸ்தி. டாய்லெட் எங்க இருக்குன்னே தெரியல. கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு போனாலும் சரியான பராமரிப்பு இல்ல. (சாரு டாய்லெட் பற்றி மட்டுமே இரண்டு பத்திகள் தன் பதிவில் எழுதியதை இங்கே நினைவுபடுத்துகிறேன்). லீவ் நாட்கள்ல மட்டும் பார்க்கிங் ஏரியா ரொம்பவே சிரமப்பட்டது.

9. கைல நீங்க எடுத்துட்டுப்போக வேண்டியது - ஆட்டோக்ராப் வாங்க பேனா, குறிப்பெடுப்பதற்காக ஸ்க்ரிப்லிங் பேட் & அவ்வப்போது தாகம் தணிக்க தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில், ரொக்கம். சில சிறிய பதிப்பக ஸ்டால்கள்ல டெபிட் கார்டு வசதியில்ல. ஆனாலும் மூன்று முதல் நான்கு கடைகள் சேர்ந்து பொதுவா டெபிட் கார்டு கவுண்டர் வச்சிருக்காங்க. எதுக்கு சிரமம்? கைல காசு பைல புத்தகம். :-)

10. இந்தக் கண்காட்சியில் சிக்கனப்படுத்த விரும்பினால் தேடல் அவசியம். சென்றமுறை மீனாட்சி பதிப்பகத்துல சுஜாதா புத்தகங்கள் மலிவுவிலைக்கு விற்றுத்தீர்ந்தது. சிலநேரங்கள்ல அரங்கிற்கு வெளியே இருக்கும் நடைபாதைக்கடைகளில் அரிய பொக்கிசங்கள் கிடைக்கும். சென்ற கண்காட்சியில் ரூபாய் 135 மதிப்புள்ள "புத்தம் வீடு" மற்றொரு பதிப்பகத்துல மலிவு விலைல ரூபாய் 35-க்கு கிடைத்தது.

11. என்னதான் வளர்ந்திருந்தாலும் "டாம் & ஜெர்ரி" பாக்குறப்ப குழந்தையா மாறும் அதே ஃபீல் தான் புத்தக வாசிப்புல காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கறதும். சென்றமுறை லயன் காமிக்ஸ் பதிப்பகம் ஜோரா களமிறங்கி கலக்குனாங்க. காமிக்ஸ் ரசிகர்கள் லயன் காமிக்ஸ் ஸ்டாலை விசிட் அடிக்க மறந்துராதீங்க. குழந்தைகளுக்கேற்ற எண்ணற்ற காமிக்ஸ் கிடைக்குது.

சரி. ரொம்ப அட்வைஸ் பண்ணி மொக்க போடுறமாதிரி இருக்குறதால சுவாரசியமாக்க எனக்கு பிடிச்ச ஐந்து புத்தகங்கள பட்டியலிடறேன் நீங்களும் கமெண்ட்ல உங்களுக்கு பிடிச்ச ஐந்து புத்தகங்கள பட்டியலிடுங்களேன். பிறருக்கு உதவக்கூடும்.

1. கதாவிலாசம் - எஸ்.ரா
2. வந்தார்கள் வென்றார்கள் - மதன
3. சிவகாமியின் சபதம் - கல்கி
4. மரப்பசு - தி.ஜானகிராமன்
5. பண்பாட்டு அசைவுகள்


கண்காட்சி கால அட்டவணை :

இடம் : YMCA Physical Education College Ground,
              Nandanam
              Chennai - 600 035

நாள் : ஜனவரி 11 முதல் 23 வரை

நேரம் : வேலை நாட்களில் 2.30 PM முதல் 8.30 PM வரையும்
                விடுமுறை நாட்களில் 11 AM முதல் 9 PM வரையும்

மேப் :  YMCA - Nandanam

போதிய அளவிற்கு இன்னும் இணைய விழிப்புணர்வு ஏற்படல. நண்பர்கள் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்தபின்னர் முடிந்த அளவிற்கு இணையத்தில் பதியவும்.

போறோம்... புத்தகங்கள அள்றோம். கெட்-ரெடி ஃபோல்க்ஸ்.

கருப்பு

Sunday, December 9, 2012

நிழலுக்கு தெரிந்திருக்குமா?!





செல்லச்சண்டையில்
என்னிரு தோள்களை
நீ தாளமிசைத்து
சோர்வடைந்த கணத்தில்

வெற்றி தோல்வியின்றி
நடுநிலை பறைசாற்றி
இதழ்கூட்டி முத்தம் தரித்தோம்

மையப் புன்னகையால்
அடுத்த வலைவிரிக்கிறாய்

சுட்டிக்காட்டினாய்...
விளக்கணைத்து
விரட்டியடித்தேன்
உன்னுடல் ஏறிய
என் நிழலை

மில்லியன்களுடன் போட்டியிட்டு
ஒற்றை அணுவாய் நான் வென்றது
உன்னுடல் பற்றத்தானோ?!

பற்றிக்கொள்...
என் முதுகு உனக்கொரு
ஆகச்சிறந்த பற்றுச்சுவர்.
விருப்பம் போல்
நகக்கீரல்களிட்டு
வண்ணம்பூசு.

இருளின் பக்கங்களில்
சிதறிக்கிடந்த வார்த்தைகளில்
எது நீ? எது நான்?

பதினொன்றா? பனிரெண்டா?
எண்ணிப்பார்க்கவில்லை
கடிகார முட்கள்
புணர்ந்தபின் ஒலித்த
மணிச்சத்தத்தை

எல்லாம் முடிந்தபின்
பற்றவைக்கிறேன்
சிகரெட் ஒன்றை...
வெண்புகை சூழ்கிறது

தின்றது போக
எஞ்சிக் கிடக்கிறது
அறையெங்கும் காமம்

மீண்டும் ஒளி.
நடந்தவை யாவும் தெரியாது
அறையின் எச்சங்களை
வேடிக்கைபார்த்தபடி
வந்துசேர்கிறது என்னோடு நிழல்

கொஞ்சம்
இளைப்பாறிக்கிட
தேநீர்க்கோப்பையோடு
திரும்புகிறேன்

Monday, July 30, 2012

அறிவோம் ஹைக்கூ :

முன் குறிப்பு :

இப்பதிவில் ஹைக்கூ என்னும் பெருங்கடலிலிருந்து கையளவு நீரை அள்ளி உங்களுக்கு காண்பிக்கிறேன். இது கடலென்றால் ஆம். கையளவு நீரென்றாலும் ஆம்தான். என்னைப்போல் ஒரு பாமரனுக்கும் புரியும்வகையில்  பல புத்தகங்களில் இருந்தும் குறிப்பெடுத்து சொல்ல முயற்சித்துள்ளேன். அட வாங்க பாஸ்... நாமும் ஹைக்கூ எழுதலாம்.

அறிமுகம் :

ஜப்பானில் தோன்றிய "ஹைக்கூ" இல்லாத உலக இலக்கிய மொழியே இல்லை இன்று.  ரெங்கா என்ற நீள்வடிவ கவிதையின் ஆரம்பத்தில் எழுதிய குறுங்கவிதையே ஹைக்கூ. "Matsuo Bashō" என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் ஹைக்கூ பிரபலப்படுத்தப்பட்டது. ஹைக்கூவின் முன்னோடி இவர். 19 ஆம் நூற்றாண்டு வரை "ஹொக்கூ" என்றழைக்கப்பட்ட இதனை ஹைக்கூ என அழைக்க ஆரம்பித்தவர் "மாஸஒகா ஷிகி".

முதலில் நாம் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். ஹைக்கூவிற்கு என்று உள்ள சில இலக்கணங்கள் ஜப்பானிய ஹைக்கூ அறிஞர்களால் கடைபிடிக்கப்பட்டது. சிலவற்றைத்தவிர மற்ற இலக்கணங்கள் யாவும் அதன்பின் எழுதுவதற்கு வசதியாக தளர்த்தப்பட்டது.

"பாஷோ", தான் எழுதிய கவிதைகளை ஹொக்கூ என அழைத்தார். அதன் அர்த்தம் ஆரம்பச்செய்யுள். ரெங்கா கவிதையின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட செய்யுள் என்பதால் இவ்வாறு அழைத்தார்.

பொதுவாக ஜப்பானியர்கள் ஹைக்கூவை மேலிருந்து கீழாக ஒரே லைனில் அச்சிடுவார்கள். ஆங்கிலத்தில் பிற மொழிகளிலும் மூன்று வரிகளை அடுக்கடுக்காக அச்சிடும் பழக்கம் உள்ளது.

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் முன்னோடிகள் என பாஷோ , யோஷோ பூஸான், கொபயாஷி இன்ஸா மற்றும் ஷிகி இந்நால்வரை குறிப்பிடலாம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... பல வார்த்தைகள் கொண்டு விளக்க வேண்டிய ஒரு காட்சியை அல்லது உணர்ச்சியை மூன்றே வரிகளில் அடக்குவதென்பது எத்தனை கஷ்டம்.  ஹைக்கூ இதை செய்து காட்டுகிறது. ஹைக்கூவின் வெற்றியே அதில்தான் உள்ளது.

உதாரணத்திற்கு ஒரு ஹைக்கூ :

அழகான பட்டம்
வானேறிவிட்டது
பிச்சைக்காரன் குடிசைமேல்

ஹைக்கூவின் விதிகள் :

1 . நேரடியாக உணர்ந்த அனுபவம். அதாவது ஒரு ஹைக்கூ கவிதை படிக்கும்போதே அந்த சம்பவம் நம் கண்முன்னே நிகழ்வதுபோல இருத்தல் வேண்டும்.

2 . எவ்வித வார்த்தை ஜாலங்களும் இருக்க கூடாது. முக்கியமாக நம் உவமைகளோ வர்ணனைகளோ கண்டிப்பாக இருத்தல் கூடாது.

3 . மூன்றாவது வரியில் ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருப்பது போல் வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஹைக்கூ.

தோட்டத்தை விற்றதும்
பறவைகள் கானம்
வேறாக ஒலிக்கிறது

இந்த ஹைக்கூவில் நாம் உணர்வது தோட்டத்தை விற்ற உரிமையாளன் ஒருகணம் தன தோட்டத்தை திரும்பி பார்க்கிறான். அதுவரை இனிமையாக ஒலித்த பறவைகள் கானம், தோட்டத்தை விற்றபின் அவன் மனத்தில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. மூன்றாவது வரியில் ஒரு ட்விஸ்ட் இருப்பதை நாம் காணமுடியும் இக்கவிதையில்.

4 . 5-7-5 என்றவாறு அசைகள் (Syllable) கொண்ட மூன்று வரிகள் இருக்க வேண்டும். ஆக... மொத்தம் 17 அசைகள் இருக்கவேண்டும் என்பது விதி. நான்கு வரிகளில் ஹைக்கூ எழுதுவது தவறில்லை. முடிந்த அளவில் மூன்று வரிகளில் எழுதுவது நல்லது.

5 . பருவ காலங்களில் ஒன்றை குறிப்பிட வேண்டும். இதை ஜப்பானிய மொழியில் Kigo (கிகோ) என்றழைப்பார்கள். அதாவது காலை, மாலை, மழை, வெயில், வசந்தகாலம் இப்படியாக... சில மறைமுக குறிப்பால் கூட காலத்தை உணரச்செய்யலாம். உதாரணம் : கானல்நீர் - கோடைகாலம்; வெள்ளம் - மழைக்காலம்; சருகுகள் - இலையுதிர்க்காலம்; (இந்த விதியை தளர்த்திக் கொள்ளலாம். நவீன ஹைக்கூ அறிஞர்கள் காலத்தை குறிப்பதை விட்டுவிட்டார்கள்)

ப்ரீயா விடுங்க. இந்த விதிகளில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பெரும்பாலான விதிகளை நவீன ஜப்பானிய ஹைக்கூ அறிஞர்களே கைவிட்டு நாளாகிறது. ஆனால் முதல் மூன்று விதிகள் இருக்கும்படியாக எழுதுவது நல்லது.

முக்கியமா ஒரு விசயம்... புரட்சிக்கருத்தோ நம் உருவகமோ ஹைக்கூவில் இருக்கவே கூடாது. கீழே வரும் மிகப்பிரபலமான குறுங்கவிதையை கவனியுங்கள்

எத்தனைபேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்

ஆரம்ப காலத்தில் இக்கவிதையை ஹைக்கூ என நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த கவிதை நிச்சயமாக ஹைக்கூ கிடையாது. இந்த கவிதையில் கடைசி வரியான "சேரிக்குள் தேர்" என்பதில் புரட்சிக்கருத்து ஒளிந்திருப்பதை காணலாம். புரட்சிகர கருத்து கலந்திருப்பதால் இது ஹைக்கூ என்ற அந்தஸ்தை இழக்கிறது.

"சிறிய கவிதையில் கவிஞன் வாசகனை ஒரு மலையுச்சிக்கு ஒரு கழுகு தன் குஞ்சை எடுத்துச் செல்வது போல அழைத்துச்சென்று, அங்கே தொபுக் என்று போட்டு விடுகிறான்! கற்பனை உள்ள வாசகன் பறக்கிறான். இல்லாதவன் விழுந்து சாகிறான்" என்று "ராபர்ட் ப்ளை" கூறியதுபோல ஹைக்கூ என்பது வாசிப்பவனை எழுதியவன் உணர்ந்த அதே விசயத்தை கண்முன்னே நிகழ்த்தி உணர செய்கிறது.

அடுத்த பாகத்தில் பிரபல ஹைக்கூ கவிஞர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை காணலாம்.

Friday, July 20, 2012

காதல்மொழி

முத்தம் கொண்டே முடிப்பது
என முடிவு
உனக்கும் எனக்குமான
ஊடல் விளையாட்டை
****************************************************************
கண்டதும் காதல் சாத்தியமே
என்பதை
உனைக்காணும் வரை
நம்பவில்லை நான்
****************************************************************
ரணப்படுத்திய தனிமையை
குத்தி கிழித்தேன் உன் நினைவுகளால்...
கைகள் எங்கும்
கடந்த காலத்தின்
காதல் குருதி கசிந்திருந்தது
****************************************************************
 நீ முத்த வங்கி... நான் ஒரு முத்த வாங்கி...
****************************************************************
அவள் குறள் வாசித்தாள்... அவளின் குரல் இனித்தது 
****************************************************************
விலகிச்சென்று விட்டாய்...
கதறி அழுகிறது
கனவில் நாம் பெயர் சூட்டி
வளர்த்த குழந்தை
****************************************************************
ஒற்றை முத்தத்தில்
வீழ்ந்து போகிறது
வலிமையற்ற நம் ஊடல்
****************************************************************
என் அறை முழுவதும்
படர்ந்து கிடக்கிறது
உனை நினைத்து சிந்திய
கண்ணீரின் ரேகைகள்
****************************************************************

மழைப்பொழுது

மழைக்குப் பின்னர்
என் அறையெங்கும்
இரைந்து கிடக்கிறது
உன் சுவாசம்
****************************************************************
பூமி நோக்கிய பயணத்தில்...
சற்றே இளைப்பாறுகிறது
இலைமேல் விழுந்த மழைத்துளி
****************************************************************
தேங்கிய நீரை
கடலாக்கி கொண்டிருந்தது
ஓடம்போல மிதக்கும்
இலையொன்று...
****************************************************************
தூவானம் தூறிச் சென்ற
மழைத்துளிகள் யாவும்...
பிரதிபலிக்கிறது
கொஞ்சம் வானத்தை
****************************************************************
அடைமழையில்
தனித்து குளியல்
என்போன்றே பாவப்பட்ட மரம்
****************************************************************
தரையில் விழுந்து மரணித்த துளிகளுக்காய்
மௌன அஞ்சலி செய்கிறது..
உன்மேல் விழுந்து
புனிதம் பெற்ற மழைத்துளிகள்
****************************************************************

Thursday, June 21, 2012

என் வாசிப்பனுபவம் :


‘மறுபடியும் பிறப்பதற்கு முதலில் ஒருவர் இறக்கவேண்டும்’ இந்த வரியை இங்கு எழுதியதற்கான காரணத்தை இறுதியில் சொல்கிறேன். குளத்தில் கிடக்கும் கல்லைப்போன்று சில நாட்களாக என்னுடைய அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்த சில புத்தகங்கள் என் மனதில் உறுத்திக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு முறை ஷெல்ப்பை திறக்கும்போதும் அவை என்னை ஏக்கத்துடன் பார்ப்பதுபோலவே எனக்குள் பிரம்மை. தூக்கமில்லாத என் இரவுகளில் நான் நாடுவது இரண்டே விசயங்கள். ஒன்று இசை மற்றொன்று புத்தகங்கள். இந்த இரவு நான் தேர்ந்தெடுத்தது புத்தகங்களை. இரண்டு புத்தகங்களை படித்து முடித்துவிட்டேன்.

ஊமைச்செந்நாய் :

பிற தமிழ் எழுத்தாளர்களை படித்த அளவுக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்களை படிக்காதது வெகுநாட்களாய் என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தது. அதை தீர்ப்பதுபோல் வந்து சேர்ந்தது அவரின் ஊமைச்செந்நாய் சிறுகதைகள் தொகுப்பு. முதல் சிறுகதையான "காடன் விளி" என்னுள்ளே பல கேள்விகளை எழுப்பியிருந்தது. மேஜிக்கல் ரியாலிசம் நிறைந்த கதை இது.

விசயத்துக்கு வருவோம். அடுத்துதான் புத்தகத்தின் தலைப்பான "ஊமைச்செந்நாய்" என்ற பெயரில் அமைந்த நெடுங்கதை படித்தேன். ஏற்கனவே ஜெயமோகனின் சிறந்த படைப்பு இது என அறிந்திருந்தமையால் பல்வேறான எதிர்பார்ப்புகள் கிளம்பியிருந்தது.



அசத்தலான எழுத்துநடை. இந்த ஒரு நெடுங்கதை மூலமாகவே என்னுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் ஜெயமோகன்.

ஊமைச் செந்நாய் என்ற அடிமை, வில்சன் துரை, தோமா, சோதி, காட்டு யானை என்ற ஐந்தே கதாபாத்திரங்களால் முப்பது பக்கத்திற்கு கதை சொல்லியிருக்கிறார். கதை ஊமைச்செந்நாயின் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கதை ஆரம்பித்த கணமே நாம் காடுகளில் சுற்றித்திரிய ஆரம்பித்துவிடுகிறோம்.

ஊமைச்செந்நாய் என்பது அதிகம் வாய் திறந்து பேசாத சிவந்த கண்களை உடையதால் அவனுக்கு ஏற்பட்ட பெயர். அவன் எண்ணமெங்கும் காடுகள் மட்டுமே. அனைத்து செயல்களையும் அவன் காட்டுடன் மாட்டுமே ஒப்பிடுகிறான். உதாரணத்திற்கு, பெண்ணுடன் புணர்ந்த காட்சியை கூட அவன் மானை வேட்டையாடி கொல்லும் காட்சியில் ஒப்பிட்டு பார்க்கிறான். அவனுக்கு காட்டின் அனைத்து அசைவுகளும் தெரிந்திருக்கிறது.

ஆங்கிலேய துரை அடிமைகளை நடத்தும் விதமும்... காடுகளில் வேட்டைக்கு செல்லும்போது பயன்படுத்தும் உத்திகளும் நம் புருவங்களை உயர்த்த செய்கின்றன.

துரையை பொறுத்தவரை அவன் அடிமை தன் உடைமையை தொடுவதைக்கூட அவன் வெறுக்கிறான். அடிமை ஒருவன் ஆங்கிலம் பேசுவதைக்கூட கசப்பான கண்களால் காண்கிறான். ஊமைச்செந்நாய் மேல் அதீத துவேசம் கொண்டு அவனை கொல்வதை கூட விரும்புகிறான். அவன் ஏன் அடிமைகள் மேல் இவ்வளவு வெறுப்பாக அலைகிறான் என்பதன் மனவியல் அசத்தல்.

இந்த நெடுங்கதையின் அத்தனை நாடியும் கடைசியில் அமைந்த இரண்டு சிறிய பத்திகளில்தான். இறுதிக்காட்சி நம்மை உலுக்குகிறது. தன்னை வெறுக்கும் துரையை இதைவிட வேறு எவ்விதமாகவும் பலி வாங்கிவிடமுடியாது.

படிக்க ஆரம்பிங்க. காட்டுக்குள்ள உலா போயிட்டு வந்த திருப்தி கிடைக்கும்.

இக்கதையில் வரும் சில முக்கிய வசனங்கள்:




இக்கதையின் லிங்க் : ஊமைச்செந்நாய் (ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இருந்து)


மதினிமார்கள் கதை :

எழுத்தாளர் கோணங்கியின் முத்திரை சிறுகதை. கதை சாத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட என் கிராமத்தையும் என் பால்யத்தையும் கண்முன் கொண்டுவந்து விட்டது.

கதை நாயகன் செம்பகம் (செண்பகம் என்பதை அப்படித்தான் கூப்பிடுவாங்க). சிறுவயதில் வசித்த தெருவுக்கே செல்லப் பிள்ளையாக இருந்த அவன் சந்தர்ப்பவசத்தால் நகரத்துக்கு ஓடி வந்துவிடுகிறான்.

தாயில்லா பிள்ளையான செம்பகத்தை அந்த கிராமத்தில் உள்ள கன்னிகள் அனைவரும் செல்லமாக வளர்க்கிறார்கள். அனைவரையும் மதினி (அண்ணி) என்றுதான் அழைக்கிறான். ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு வாசம் இருப்பதைப்போல ஒவ்வொரு மதினிக்கும் ஒவ்வொரு குணம். ஆனாலும் இவன்மேல் பாசம் வைப்பதில்மட்டும் அனைவரும் சமம்.

அனைத்து மதினிகளும் இவனை "என்ன கட்டிக்கோ" என சொல்லி கிண்டலும் கேலியுமாக வளர்க்கிறார்கள். தன் தந்தையும் இறந்தபின்னர் கிராமத்தை விட்டு ரயிலேறி நகரம் வந்த செம்பகம் சில ஆண்டுகள் கழித்து தன் கிராமம் நோக்கி வருகிறான்.

வந்து பார்த்தால் அதிர்ச்சி. அவன் வாழ்ந்திருந்த கிராமம் தன் சுயத்தை இழந்திருந்தது. எந்த மதினியும் இவன் கண்ணில் படவில்லை. அனைவரும் வாக்கப்பட்டு போயிருந்தனர்.

இவனை அடையாளம் காண யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட அவன் தலையில் கைவைத்து கண்கலங்கி ஒரு ஓரத்தில் அமர்கிறான்.

நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான் என்றவாறாக கதை முடிகிறது.


டிஸ்கி : முதல் வரியான ‘மறுபடியும் பிறப்பதற்கு முதலில் ஒருவர் இறக்கவேண்டும்’ என்பது சல்மான் ருஷ்டியின் மிகப்பிரசித்தி பெற்ற ஆரம்ப வரி. என்னோட கட்டுரையை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல. அதான் இதை எழுதி ஒருவழியா ஆரம்பிச்சுட்டேன். ஹா ஹா...

Tuesday, May 29, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகம்


தலைப்பை பார்த்ததும் எங்களுக்கு தெரியாததா? நல்லாத் தெரியுமேன்னு நீங்க நினைக்கலாம். ஆனால் உண்மையில் நாம் அறியாத பல பொக்கிசங்களையும் சிறப்புகளையும் தன்னோடு கொண்டுள்ளது இந்நூலகம்.



பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைத்த நாள்முதல், உடனே சென்றாக வேண்டும் என்று ஒன்னரை வருடங்கள் காலம் தாழ்த்தியதற்காக  என்னை நானே ஆள் வைத்து அடிக்கவேண்டும்.

ஒருவழியாக நானும் குணா மாம்ஸும் கடந்த ஞாயிறன்று செல்வதென முடிவெடுத்து, சென்றும் விட்டோம்... பொதுவாக டாஸ்மார்க் அல்லது ட்வீட்-அப் செல்ல இருப்பதாக யாராவது ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டால் வண்டியில் தானாய் ஏறி வரவிருப்பதாக பலர் விருப்பம் தெரிவிப்பர். நூலகம் செல்வதாய் நாங்கள் போட்ட ஸ்டேட்டஸிற்கு ஒரு ரிப்ளை கூட வரல. நாம சேர்த்து வச்ச கூட்டம் அப்படி.

ஒன்பது தளங்களுடன் (தரைத்தளத்தையும் சேர்த்து) பிரமாண்டமாய் எங்களை வரவேற்றது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம். உள்ளே நுழைந்ததும் காத்திருந்தது எங்களுக்கு அதிர்ச்சி. முழுக்க குளிர்சாதன வசதியுடன் நாங்கள் நுழைந்தது ஏதோ ஸ்டார் ஹோட்டல் போன்றதொரு பிரம்மை. ஒவ்வொரு தளமும் அ & ஆ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பூந்தோட்டத்தில் நடைபோடும்போது நம் கைகள் எப்படி தன்னிச்சையாக பூக்களை வருடுமோ அப்படியே எங்கள் கைகள் ஒவ்வொரு நூலையும் வருட ஆரம்பித்திருந்தன. நூலகமெங்கும் அமைதியும் புத்தகத்தின் ஏகாந்த வாசனையும் நிரம்பியிருந்தது.

தரைத்தளம் :

ப்ரெய்லி பகுதி :


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் - (கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்) என்ற குறளுக்கேற்ப
தரைத்தளத்தில் கண் பார்வையற்ற சகோதரர்களுக்காக "ப்ரெய்லி" பகுதி அமைக்கப்பட்டுள்ளது.




சொந்த புத்தகங்கள் பகுதி :

சொந்த புத்தகங்களைக்கூட எடுத்து வந்து படிப்பதற்காக சொந்த புத்தக பகுதி தரைத்தளத்தில் உள்ளது. புத்தகங்களை கொண்டு வந்து அனுமதி பெற்று பின் இங்கு வைத்து படிக்கலாம்.

முதல் தளம் :


குழந்தைகள் பகுதி:

சென்றிருந்த இருவரும் வெகு சமீபத்தில் குழந்தை பருவத்தை கடந்திருந்தபடியால் உள்ளே செல்ல அனுமதியில்லை (சரி சரி... திட்டாதீங்க). ஆதலால் வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துவிட்டு வந்தோம். குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு அனுமதி உண்டு. குழந்தைகளை கவர்வதற்காக கதை சொல்லும் CD & DVD என மல்டிமீடியா அம்சங்கள் நிறைந்ததாய் காணப்படுகிறது இப்பகுதி.


பருவ இதழ்கள் பகுதி :


இங்கதான் நாங்க கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டோம். பருவ இதழ்கள் பகுதின்னா "அந்தமாதிரி" பகுதின்னு நெனச்சு உள்ள போய் ஏமாந்தோம். அது வார & மாத இதழ்கள் நிறைந்த Periodical Section-ஆம். பெருத்த ஏமாற்றத்தோடு வெளியே வந்தோம்.

இரண்டாம் தளம் :


தமிழ் பகுதி :


அடடே... தமிழின் இலக்கணம் முதல் வானவியல் வரை ஒரு லட்சம் புத்தகங்கள் நிறைந்த பகுதி இது. ஈழம் பற்றிய "முறிந்த பனை" உட்பட ஏராளமான புத்தகங்கள் நிறைந்த பொக்கிசம் இப்பகுதி. (தமிழர் வரலாற்றை பற்றிய ஆய்வு நூலான தொ.பரமசிவம் அவர்கள் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" புத்தகம் இப்பகுதியில் இல்லாதது சிறிய ஏமாற்றம்)

தமிழ் இலக்கியப்பகுதி :


இங்குதான் நாங்கள் அதிக நேரத்தை செலவிட்டோம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு இருந்தது. இலக்கியதாகம் உள்ள எவரும் இங்கு திகட்ட திகட்ட தாகம் தீர்க்கலாம். அங்கு வைத்தே பின் நவீனத்துவத்தின் ஆரம்பமாக கருதப்படும் சாரு எழுதிய "எக்சிஸ்டென்ஷிலியசமும் ஃபேன்சி பனியனும்" நாவல் படித்துமுடித்தோம். தயவு செஞ்சு கதை மட்டும் என்னன்னு கேக்காதீங்க. சத்தியமா சொல்ல தெரியல. (இருந்தாதானே சொல்றதுக்கு).

இலக்கிய தாகம் கொஞ்சம் தீர்த்த களைப்பில் கேண்டீன் நோக்கி கீழே வந்தோம். நல்ல ஸ்ட்ராங் & கசப்பான காபியுடன் அமர, அழகான பதுமைகள் இருவர் எங்கள் முன் வந்தமர்ந்தனர். அதுவரை கசந்திருந்த காபி தேனாய் இனிக்கத் தொடங்கியிருந்தது. இதுக்குமேல இங்க இருந்தா தபு சங்கர் மாதிரி கவிதை எழுதவேண்டியிருக்கும் என்று அவ்விடத்தை விட்டு தடாலடியாக கலைந்து சென்றோம்.


மூன்றாவது தளம் :


ஆங்கிலப் பகுதி :


தமிழுக்கு அடுத்துதான் ஆங்கிலம் என்று சொல்லாமல் சொல்வதுபோல் தமிழ் நூல்கள் அடங்கிய தளத்திற்கு மேல் ஆங்கில நூல்கள் பகுதி அமைக்கப்பட்டுள்ளது அனைத்து புத்தகங்களும் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைக்கிறது. ஆங்கிலம் இருக்குற இடத்தில் எங்களுக்கென்ன வேலை என்று வெளிநடப்பு செய்தோம்.

நான்காவது தளம் :


Economics, Law, Education, Language & Lignuistics, Literature, Folklore & Public Administration ஆகிய துறை சார்ந்த புத்தகங்கள் இப்பகுதியில் கிடைக்கிறது. நிறைய கல்லூரி மாணவர்களை இப்பகுதியில் காணமுடிந்தது.

ஐந்தாவது தளம் :


Mathematics, General Science, Astronomy, Physics, Chemistry etc., ஆகிய துறை சார்ந்த புத்தகங்கள் இங்கு வாசிக்க கிடைக்கிறது

ஆறாவது தளம் :


Engineering, Agriculture, Accounting, Architecture etc., ஆகிய துறை சார்ந்த புத்தகங்கள் இங்கே வாசிக்க கிடைக்கிறது. (இன்னொரு கவனிக்கவேண்டிய விசயம் என்னன்னா இந்த பகுதியில்தான் கேண்டினில் பார்த்த அந்த பெண்கள் படிக்க நுழைந்தனர். ஹி ஹி...)

ஏழாவது தளம் :


வரலாறு முக்கியம் அமைச்சரே! ஆம் இப்பகுதி வரலாற்று நூல்கள் அடங்கிய பகுதி. ஓலைச்சுவடிகள் அடங்கிய பகுதி பார்வைக்காக திறக்கப்படவில்லை. இன்னொரு புறத்தில் ஐரோப்பா, இந்தியா, உலகம் என பகுதிவாரியாக வரலாற்று நூல்கள் பிரிக்கப்படிருந்தன.

சுவாரசியமான சில தகவல்கள் :


நுழைவு வாயிலில் அறிஞர் அண்ணா தன் மடியில் புத்தகம் ஏந்தி படிப்பது போன்றதொரு சிலை. நூலகத்துக்கு ஏற்ற இச்சிலை வடிவைமத்தவருக்கு ஆயிரம் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

நூலக நேரம் - காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படுகிறது. சொந்த நூல்கள் பகுதியில் படிப்பவருக்கு மட்டும் இரவு 9 மணிவரை அனுமதி.

இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மின் நூல்கள் அடங்கியுள்ள இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் லைப்ரரி இது.

தங்களுக்கு தேவையான நூல்களை கண்டறிவதற்கு வசதியாக தரைத்தளத்தில் நுழைந்ததும் ஒரு லேப் டாப் உள்ளது. இதில் நாம் தேடும் நூல் எந்த தளத்தில் எந்த பிரிவில் உள்ளது என்பதுட்பட தகவல் கிடைக்கிறது. நம் தேடுதல் சுமை இதன்மூலம் குறைகிறது.

சொந்த நூல் பகுதிக்கு புத்தகம் கொண்டு செல்ல விரும்புவோர் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.

Radio Frequency Identification - சுருக்கமாக RFID எனப்படும் வசதியும் ஒவ்வொரு தளத்திலும் CCTV கேமராக்களும் இருப்பதால் புத்தகத்தை ஆட்டைய போடமுடியாது என்பது இந்நூலகத்தின் சிறப்பு (வட போச்சேன்னு ஃபீல் பண்ணா நீயும் என் நண்பனே... அவ்வ்)

அனைத்து தளங்களும் குளிரூட்டப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு. வெயிலுக்கு இதமா இருக்குதுங்கோ... அமர்ந்து படிப்பதற்காக குஷன் இருக்கைகள், வெளிச்சமான இடம் என்று புத்தக வாசிப்பாளர்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது.

கான்பரன்ஸ் ஹால், ஆம்பிதியேட்டர், 200 பேர் அமரக்கூடிய வகையில் உள்ள ஆடிட்டோரியம் என நிறைய வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்குதான் ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தபோது மீட்டிங் நடைபெற்றது.



தங்கள் இருசக்கர & நான்கு சக்கர வாகங்கள் பார்க்கிங் செய்ய அருமையான இடவசதி உள்ளது.

பராமரிப்பு முறையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆங்காங்கே காவலர்கள், ஒவ்வொரு ரேக்காக சுத்தம் செய்யும் துப்புரவாளர்கள், கலைந்து கிடக்கும் நூல்களை அடுக்கும் பணியாளர்கள் என்று அருமையான பராமரிப்பு. எப்படியிருக்குமோ என்று தயங்கி தயங்கி ரெஸ்ட் ரூமில் நுழைந்தால் சத்யம் தியேட்டர் போன்றதொரு தூய்மை. பணியாளர்கள் அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

நூலகத்தில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. ஆனாலும் ஆங்காங்கே சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ளே நுழையும்போது தங்கள் பெயர் மற்றும் கையெழுத்து இடவேண்டும். சரித்திரத்துல நம்ம பேர் வரவேண்டாம்? அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு போல. அனைத்து தளங்களிலும் லிப்ட் வசதி உள்ளது.

மாணவர்கள் இங்கு தங்கி நூல்களை ஆய்வு செய்யும் வகையில் இங்கு தனியறை வசதிகள் உள்ளன. இதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

தற்போதைக்கு குழந்தைகளுக்கு மட்டுமே இந்நூலகத்தில் உறுப்பினர் ஆக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விரைவில் அனைத்து தரப்பினருக்கும் இவ்வசதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சில மனக்குறைகள் :


இத்தனை வசதிகள் இருந்தும் நம் மக்கள் (என்னையும் சேர்த்து) இந்நூலகத்தை இன்னும் சிறப்பாக பயன்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது .
நூலகம் முழுவதும் பெயர்ப்பலகை உட்பட தூய தமிழில் உள்ளதால், மற்ற மொழி மக்கள் அடையும் கஷ்டத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது.

அவ்வளவு பெரிய நூலகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கேண்டீன் மிகச்சிறியது. ஒருவேள கொஞ்சபேர்தான் வருவாங்கன்னு முன்னமே தெரிஞ்சுருக்குமோ?

இந்நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற நினைக்கும் தமிழக முதல்வரின் முடிவு அடுத்த வருத்தம். ஒரே ஒருமுறை இந்நூலகத்தை வந்து பார்வையிட்டால் உங்கள் எண்ணத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள் முதல்வரே. என் ஆட்சியில் நிர்ணயித்தது என்று பெருமைப்படுவதற்குப் பதிலாய் என் ஆட்சியில் நூலகத்தை மாற்றவில்லை என்ற பெருமை உங்களை வந்தடையும். அத்தகைய அளவில் வசதிகள் நிறைந்துள்ளது இந்நூலகம்.

இனி வாரந்தோறும் ஞாயிறன்று இங்கு ஆஜர் ஆவதென்று முடிவெடுத்து விட்டேன். கற்றது கையளவு கல்லாதது உலகளவு இல்லையா நண்பர்களே...

நூலகம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்கை சொடுக்கவும் :
Anna Centenary Library

Tuesday, May 15, 2012

என்னை தொலைத்த நான்


#TNMegaTweetUp ல் நான் வாசித்த கவிதையெனும் கட்டுரை. உங்கள் பார்வைக்காக. முதன்முறை மேடை ஏறி மைக் பிடிப்பதால் என்னுள்ளே பதட்டம் இருந்தது. அதனால் நயம்பட என்னால் வாசிக்க முடியவில்லை என்பது எனக்கே தெரியும். ஆயினும் இடையிடையே ரகளை செய்தது எனக்கே ஆச்சர்யம்.

ஒரிரு நாட்களாய் என்னை

கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

என் வீட்டின் கதவு திறந்ததும்
எதிர்வீட்டின் கதவு
தயக்கத்தோடு அடைக்கப்பட்டது

அலைபேசியில்... வராத அழைப்பிடம்
பேசுவதாக பாசாங்கு செய்தபடியே
என்னை பதட்டத்தோடு கடக்கிறார்
பக்கத்து ஃப்ளாட் "ரகு" அண்ணா

தொலைவில் இருந்தால்
முத்தத்தை பறக்கவிட்டும்
அருகிலிருப்பின்
காதோரம் "இச்" என்ற
சத்தத்தோடும்
முத்தம் தரும் "வித்யா குட்டி"
என் எதிர்வந்தும்
அவள் தாயின் இறுகப்பற்றிய
அரவணைப்போடே
ஏற்றப்படுகிறாள்
பள்ளி வண்டியில்

சமீப காலமாய்
புன்னகையும் வெட்கமும் கலந்து
காதல் பார்வை வீசிய
எதிர்வீட்டு குமரியை
காணவே முடிவதில்லை

என் முன்னே பேச்சை மறந்து
பின் சென்றதும் குசுகுசுப்போடு
பேசும் சிலரின் சத்தமும்
காதில் கேட்டது

கார்த்திக் என்ற என் பெயரை
"காத்திக் சாப்" என
மொழிமாற்றம் செய்து
விளிக்கும் கூர்க்காகூட
"நமஸ்தே"வை மறந்துவிட்டு
ஏளனப் பார்வை ஏந்தி
என்னை எளிதாய்
கடந்து சென்றான்

இப்படியாக கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

ரயில்நிலையம்போல்
எப்போதும் சலசலத்திருக்கும்
கையேந்திபவனும்
எனை கண்டதும்
சலசலப்பு அடங்கி
மயான நிசப்தத்தை
தற்காலிகமாய் கடன்
வாங்கியிருந்தது

குழப்பத்தினூடே அலுவலகம்
சென்று அலுவல் முடிந்து
மாலை மீண்டும் விரைந்தேன்
என் குடியிருப்பை நோக்கி

நான் சென்றுசேர்ந்ததும்
வந்து சேர்ந்தது
"குடியிருப்பு செயலாளரின்" அழைப்பு

என் வணக்கத்தோடும்
அவர் வரவழைத்திருந்த தேநீரோடும்
இனிதாய் ஆரம்பித்தது
எங்களின் சந்திப்பு

(பேச்சில் தேர்ந்த அவர்
சந்திப்பு ஆரம்பித்த கணம்தொட்டே
என் தலையின் மேல்
ஆணியை வைத்து அடிக்கத்
தொடங்கியிருந்தார்)

இனிதாய் ஆரம்பித்த எங்களின் சந்திப்பு
"உங்க ஃப்ளாட் ஓனர்கிட்ட பேசிட்டேன்.
எப்ப ஃப்ளாட்டை காலி செய்கிறீர்கள்?"
என்ற அவரின் கேள்வியோடு
முடிவுக்கு வந்தது

ஏன் இத்தனை மாற்றங்கள்
என்ற காரணம்
சற்று தாமதமாகவே
தெரிய வந்தது

தெரியவந்த கணம் அதிர்ந்தேவிட்டேன்

அண்மையில் பெய்த அடைமழையில்
கிராமத்து நினைவில் நான்
குதித்து நனைந்ததை
கண்ட சிலபேர்
என் மனநிலை குறித்து
எழுப்பிய சந்தேகங்களே
அனைத்தின் காரணமென்று
தெரியவந்தது

ஆம் எனக்கு "சைக்கோ"
என்று பெயரும்
வைத்திருந்திருக்கிறார்கள்

நான்கு சுவற்றுக்குள் "ஷவரின்" கீழ்
குளிப்பதென்பது மழைக்குளியல் அல்ல என்பதை
எப்படி புரியவைப்பதென தெரியவில்லை
நகரத்து மக்களுக்கு

மழைநீர் சேகரிப்பு தொட்டியில்
சேகரிப்பதென்றும்
மறுநாள் காலையில்
சாலைநிரம்பி போக்குவரத்து
நெரிசலாகும் என்ற அளவுக்கே
மழையை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்
நகரத்து மக்கள்

மழை குறித்த தவறான புரிதலை
எண்ணி கொட்டித்தீர்க்கிறது
மேகமும் மழையாய்...

யாரேனும் சொல்லுங்கள்
மழையில் நனைவதென்பது
அத்தனை பெரிய
குற்றமா நகரத்தில்???

Monday, April 16, 2012

காதலிக்கு ஒரு கடிதம் :

இருபத்திமூன்று அகவை
உனக்காய் காத்திருந்த என் மனம்
உன்னைக்கண்ட அந்த நொடியில்
கவலைகள் தீர்ந்து ஆர்ப்பரித்ததை
எப்படி சொல்வதென புரியவில்லை?

எதற்காக புரிய வைக்கவேண்டும்?
அதே நிகழ்தல் உனக்குள்ளும் நடந்திருக்கும்
உண்மைசொல் பெண்ணே...

உன்னை நான் பிரிந்திருந்த வேளையில்
என்னை கடந்து சென்ற
குளிர்காற்றும் என்மேல்
அனலை கக்கியபடி சென்றது

உனைத்துரத்தியது நானா? - அல்லது
என்னைத்துரத்த வைத்தது நீயா?
என்ற கேள்விக்கு...
கடைசிவரையில் பதிலில்லை என்னிடத்தில்
ஆயினும் - உன் ஒற்றைப் புன்னகைக்காய்
உன் காலடி பதிந்த வீதியில்
என் காலம் முழுக்க
சுற்றிவர ஆயத்தமானேன்...

ஒருநொடிதான்... ஆனாலும்
நீ சிந்தும் கடைவிழிப்பார்வைக்காக
தெருவை நீ கடக்கும் வரை
உன்னைப் பின் தொடர்ந்தேன்

நீ கடந்த பின்னும்
அந்த நொடி
என் நினைவில் கடக்காமலிருக்க
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திக்கொண்டிருந்தது
என் மனம்

என் மூளைக்கும் இதயத்திற்கும்
அடிக்கடி பிணக்குகள் வருவதுண்டு...
உனக்கேற்றவன் நானல்ல
இது மூளையின் சொல்...
உனக்கே உனக்கென உருவானவன் நான்
இது இதயத்தின் சொல்...
இப்போது புரிகிறதா? நான் ஏன்
இதயத்தின் சொல்லையே
கேட்கிறேன் என்று...

என்னால் வானவில்லை வளைக்கவோ
மலையை பெயர்க்கவோ இயலாது
ஆயினும் என்னையே உனக்காகத்
தர இயலும் - ஆனால் நீ மறுக்கிறாய்...

நீ மறுப்பது என்னையா? அல்லது என் காதலையா?
இரண்டும் ஒன்றுதான்...
என் கவிதைகள்கூட உன்னை
காதலிக்க ஆரம்பித்துவிட்டது...

நான் உன்னைத்துரத்துவது என் காதலை - நீ
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல...
என்னைவிட உன்னை யாரும்
இவ்வளவு நேசிக்கமுடியாது என்பதை
நீ தெரிந்துகொள்ளத்தான்

அது சரி... பெண்களுக்கு தெரிந்தும் தெரியாததுபோல்
இருப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ?

என்றும் அன்புடன்,
என்றாவது ஒருநாள் என் காதலை
நீ ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையுடன்
"காதலை காதலிக்கும்"
அன்பு உள்ளம்.

Thursday, April 12, 2012

கவிதையும் எதிர்கவிதையும் -II

வெற்றிகரமாக "கவிதையும் - எதிர்கவிதையும்" அடுத்தபாகம் தயார். இதோ உங்கள் பார்வைக்காக...

ட்விட்டரில் ஒரு கீச்சுக்கு எதிர்கீச்சு வருவது இயல்பு. ஆனால் ஒரு கவிதை கீச்சுக்கு எத்தனை எதிர்கீச்சுகள்? ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, நான்கூட கொஞ்சநேரம் யோசிச்சு கவுஜ கீச்சுவேன். ஆனா நான் கீச்சிய அடுத்த நொடியே அதற்கான எதிர்கீச்சு டைம்லைனில் வந்து விழும். நீங்களே படிச்சு பாருங்க.

என்ன வேடிக்கைன்னா என்ன பாலோ செய்த சில நாட்களில் ட்விட்டர் உலகின் சூப்பர் ஸ்டார் தோட்டா அண்ணன் ரொம்ப நொந்துட்டார். பாருங்க அவர் எந்த அளவுக்கு நொந்து போயிருக்காருன்னு.


தோட்டா அண்ணனும் விட்டபாடா இல்ல. என்னோட கீச்சுக்கு அவரும் எதிர்கீச்சு போட்டு துவம்சம் பண்ணிட்டார். இதோ

கவிதை :


எதிர்கீச்சு:


என்னை திருத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் நான் திருந்தல. என்ன திருத்தறதுக்கு பதிலா, மத்தவங்களையாவது எச்சரிப்போம்ன்னு அவர் கீச்சிய கீச்சு தான் இது.


அந்த அளவுக்கு எல்லாரையும் கொலையா கொன்னுருக்கேன். மத்த எதிர்கீச்செல்லாம் படிங்க. வயிறு வலிக்க சிரிப்பது உறுதி.

கவிதை :


எதிர்கீச்சுகள்:




கவிதை :


எதிர்கீச்சுகள்:




கவிதை :


எதிர்கீச்சுகள்:




கவிதை :


எதிர்கீச்சுகள்:






கவிதை :


எதிர்கீச்சுகள்:





கவிதை :


எதிர்கீச்சுகள்:





(குறிப்பு : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிப்பதற்காக மட்டுமே)

Saturday, March 17, 2012

கண்ணீரில் கரைந்த காதல்...



பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு...
விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில்
விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது

பெண்டு என வாசல் தாண்ட
கட்டுப்பாடிட்ட குடும்பம்
குடிபெயந்தது வீதிக்கு...
பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும்,
உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்!

விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த - ஓர் இரவு
வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்...
இருநூறு குடும்பம் வாழ்ந்த ஊரில்
இரண்டு நிமிடங்களில் இருநூறு பேர் கூட எஞ்சவில்லை...

ஊறவுகூடி பூ சொரிந்து உன் கரம் பற்ற எண்ணிய நான்
அனாதையாய் உன் கை சேர்ந்தேன் செல் (shell) தூறலில்...

உயிருக்கு உத்திரவாதம் இல்லா நிலையில்
உன் உயிரான என்னை காப்பாற்ற முனைந்தாய்,
என் உயிரான உன்னை மறந்து,
கப்பலேறி கச்ச தீவு போகச்சொன்னாய்
கணாளா உன்னை பிரிந்து...

எதிர்த்து பேசயிலலாததால் ஏறினேன்
தாய் புதைந்த தாய் நாட்டை விட்டு

கயவரின் பார்வை மேல் மேயும்பொழுதெல்லாம்
போர்த்தி கொண்டேன் உன் பார்வையை

கடைசி மூச்சாய் கடலில் கரைய எண்ணியவளை
கருணையின்றி கரை சேர்த்தாள் கடலன்னை,
சஷ்டி கவசம்போல் வாய் உன் பெயரை முனங்க
அரை மயக்கத்தில் அடைப்பட்டேன் அகதி முகாமில்...

நாட்டை காக்ககொண்ட உறுதியில்
நங்கைக்கு தந்த உறுதியை மறந்தாய்
அணுகணமும் பிரியேன்னென...

மஹாராணியாய் உன்னுடன் வாழ வேண்டியவள்
மிருகமாய் நடத்தபடுகிறேன் இங்கு,
தனிமையில் நின் நினைவுகளை புரட்டிபார்த்து புரட்டி பார்த்து
நைந்து போனது அதுவும் இங்கு அடைபட்டோர் மனம்போல்...

பகலிரவு பாராமல் என்னுள் எழும் ஒரே கேள்வி
பதுங்கு குழியில் பிணங்களுக்கிடையே
உன் அரவணைப்பில் ஒளிந்திருந்த இரவு
ஏன் பிரியவில்லை என் உயிர்?

எழுதியவர் : S. சந்தோஷ்
ட்விட்டர் முகவரி : @_santhu

Monday, March 12, 2012

அழகி


உன் கூந்தல் மல்லிகை உணர்த்தியது நீ மதுரையென...
நான் உணர்ந்தேன் உன் விழிகள் - மதுவென...

வர்ணிக்க வார்த்தையில்லை
புருவங்களின் கண்மையைவிட
கருமையான உன் விழிகளை

சூரியனுக்கு சுண்ணாம்பு இடுவது போலத்தான்
சிவந்த உன் உதடுக்கு சாயமிடுவதும்
உன் உதடு சிவக்க சாயம் தேவைதானா?

உன் சிரிப்பையும் அநேகமாக
சத்தமாகவே வெளிப்படுத்துகிறாய்
உனைப்போலவே ஒளிவுமறைவின்றி

வெட்கப்படுவதாய் சிலநேரம்
நீ வெட்கப்படும்போது
வெட்கமும்... வெட்கப்படுகிறது

சிலசமயம் இருளிலும் "அழகி" நீ...

(குறிப்பு: இந்த கவிதைக்கு இரு அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக படிக்கும் எவருக்கும் இது ஒரு அழகிய பெண்ணை வர்ணிப்பதுபோன்றே இருக்கும். ஆனால் இதன் மற்றொரு அர்த்தம் இது முற்றிலும் ஒரு விலைமகளை பற்றிய வர்ணனை. விலைமகளைப் பொருத்திப்பார்த்து படித்துப்பாருங்கள் உண்மை புரியும். கடைசி வரியான இருளிலும் அழகி நீ என்பதுகூட அவள் ஒரு "அழகி" என்பதை குறிக்கும்)

Sunday, March 4, 2012

அரவான்

அரவான் - "நல்லா வருவான்" - திரை விமர்சனம் (மாதிரி)

Blog வச்சிருந்தா ஒரு படத்துக்காவது விமர்சனம் எழுதியாகனும்ங்கறது எழுதப்படாத விதி... அதனால நான் எழுதல, எழுதனும்ன்னு தோனுச்சு அதான் எழுதறேன்.



படத்தின் முதல் ஸ்டில் வந்தநாள்முதல் "மருதநாயகம்" படத்தைப்போல் ஆகிவிடுமோ என்ற பயத்தையும் கடந்து வெளிவந்தேவிட்டது. ஏமாற்றமளிக்காமல் திருப்தியும் அளித்திவிட்டது கூடுதல் சிறப்பு.

முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சனம் சொல்லப்போறேன். (அப்படியாவது தியேட்டருக்குப்போய் படம் பாருங்களேன்)

அனைவரது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் மற்றொரு மைல்கல்லாக மாறியிருக்கிறான் அரவான். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் (வாங்கப்போகும் விருதுகளுக்கும் சேர்த்து)

மகாபாரதத்தில் பாரதப்போர் தொடங்கும் முன்பு பாண்டவர் வெற்றிக்காக பலி கொடுக்கப்பட்ட அர்ஜுனரின் மகன் பெயர்தான் "அரவான்". படத்திற்கும் அது பொருத்தமான தலைப்புதான்.

சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற "காவல்கோட்டம்" நூலின் சிறு பகுதியில் இருந்து மெருகேற்றி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தனது முந்தைய படங்களின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு பீரியட் பில்ம் எடுக்க முன்வந்தமைக்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட்.

இந்தப்படம் 18 ஆம் நூற்றாண்டில் மதுரையை சுற்றி களவு செய்வதையே தொழிலாக செய்து, வாழ்ந்து வந்த கள்வர் கிராமத்து மக்களை சுற்றி பிண்ணப்பட்ட கதை.

ஆரம்ப காட்சியிலேயே வெள்ளியை (நட்சத்திரங்களை) வைத்து காலத்தை கணக்கிட்டு களவுக்கு செல்வதும், களவுக்கு போன இடத்தில் அவர்கள் செய்யும் களவு தந்திரங்களும் சபாஷ்... எண்ணெய் விட்டு சத்தமில்லாமல் தாள் திறப்பதும், குருட்டுக் கிழவியின் வெற்றிலை இடிக்கும் சத்தத்தில் நகைப்பெட்டியை ஆட்டயைப்போடுவதும் இயக்குனரின் "களவு" டச்.


படத்தின் ஆரம்பத்தில் பசுபதியின் கை ஓங்கினாலும், ஆதி தனது அசாத்திய நடிப்பால் அதன்பின் அனைவரையும் கவர்கிறார். இருவரும் தங்கள் கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுத்திறார்கள். சிக்ஸ் பேக் வைத்து, ஆதி இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

படத்தின் முதல்பாகம் முழுவதும் களவு தந்திரங்களும், ஆதி யார்? என்று அறியும் ஆர்வத்திலும் நகர்கிறது. இரண்டாம் பாகத்தில் ஆதியைப்பற்றிய முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கிறது. படத்தின் இறுதியில் களவு கிராமம் காவல் கிராமமாக மாறுகிறது.

பீரியட் பில்ம் என்பதால் கலை-இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் படத்திற்கு பின்னணியில் அதிகம் உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தின் ஒளிப்பதிவில் நாமும் 18 ஆம் நூற்றாண்டின் காடு... மலை... களவு என சுற்றித்திரிகிறோம்.

வசந்தபாலன் & சு.வெங்கடேசன் அவர்களின் எளிய வசனம் படத்திற்கு கூடுதல் பலம். உதாரணத்திற்கு சில : "தூங்குறவன் காவலுக்கு போகக்கூடாது, தும்முறவன் களவுக்கு போகக்கூடாது", "களவுல இருந்துதான் காவல் பொறக்கும்", "எல்லாரும் சாகத்தான் போறோம். சாகாத மனுசன்ன்னு யாராச்சும் இருந்தா அவனுக்கு கட்டிவைங்க"

பாடகர் கார்த்தி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். வாழ்த்துகள் சார் !!! பாடல்கள் கேக்க இதமாக இருக்கிறது. பின்னணி இசையைப்பொருத்தவரை தேறுகிறார். ஆனால் படத்தின் இறுதிக்காட்சியில் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜாவா இருந்திருந்தா கண்கலங்க வைத்திருப்பார் என்பதே அநேக பேரின் கருத்து.

சிமிட்டி கதாபத்திரத்தில் வரும் "அர்ச்சனா கவி", ஆரம்பத்தில் கலகலப்பாக தோன்றுவதிலும், அதன்பின் ஆதி திருமணம் செய்ய மறுக்கும்போது கண்கலங்குவதிலும் மனதை அள்ளுகிறார்.

ஹீரோயின் தன்சிகா இரண்டாம் பாகத்தில்தான் தோன்றுகிறார். கருப்பான தேகம், கண்ணால் பேச்சு என்று ஆரம்பித்து ஆதியை கல்யாணம் செய்யும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.

விலைமகளாக வரும் ஸ்வேதா மேனன் ஒரு பாடலில் கவர்ச்சியும்... அதன்பின் வரும் ஒரு முக்கிய காட்சியிலும் அசத்துகிறார். "அரைஞான்கொடி" காட்சி ஒன்றுபோதும் இவரையும் இயக்குனரையும் பாராட்ட.

ராசாவின் மனைவியாக (சின்ன ராணி) வரும் ஹேமா மாலினி கண்களில் வஞ்சம் வைத்து பேசுவது அசல் வில்லத்தனம்.

அஞ்சலி இந்தப்படத்தில் சும்மா வந்துபோறார் (அஞ்சலிக்காக படத்துக்கு வந்து, ஏமாந்து நொந்துபோனான் அஞ்சலி ரசிகனான என் நண்பன்)

பரத்தும் படத்தில் நடித்திருக்கிறார் அவ்வளவே...

சிங்கம்புலியின் "கொழுந்தியா" காமெடியும், "கொளுந்தியாவ பத்திரமா பாதுகாக்கனும்" வசனமும் சிரிக்கவைக்கிறது.

யாருப்பா இந்த ராசா? என்று தியேட்டரில் கேக்க வைத்துவிட்டார் ராசாவாக நடித்தவர்.

படத்தின் நிறைகள்:

பீரியட் பிலிம்ன்னாலே "மனோகரா" காலத்து வசனம்தான்னு  இல்லாம எளிமையா நடைமுறை வசனம் படத்தில பேசறது பெரிய பலம்.

சித்தார்த்தின் ஒளிப்பதிவு நம்மையும் ஒரு கதாபாத்திரமா மாத்தி படத்துல சுத்திவர வச்சுருது.

18 ஆம் நூற்றாண்டின் கதாபாத்திரமாகவே மாறி... வாழ்ந்த நடிகர்கள் மிகப்பெரிய பலம்.

படத்தின் குறைகள்:

படத்தின் பெரிய குறை இரண்டாம் பாகத்தில் ஸ்பீட் பிரேக்கராக நிறைய பாடல்கள் வருவதுதான். அவசியம் இத்தன பாட்டு வேணுமா?

படத்தில் ஆங்காங்கே தென்படும் மசாலாத்தனம் அடுத்த குறை.

ஹீரோ மாடு மேல வர்றப்ப போடற சண்ட காட்சியிலயும் மத்த காட்சியிலையும் கிராபிக்ஸ் அப்பட்டமா தெரியுது. ஏன் பாஸ் சரியா கவனிக்கலையா?

படம் முடிஞ்சதுக்கு அப்புறம் மரண தண்டனை தடை செய்யப்படவேண்டும் என்ற ஸ்லைட் எதுக்காக பாஸ்? படத்தோட கடைசி அஞ்சு நிமிசத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

பினிஷிங் டச்:

கனமான கதை... கடின உழைப்பு... தமிழ் சினிமாவில் மற்றுமொரு மைல்கல் - அரவான் (சொல்லமறந்துட்டேன்... மசாலா பட விரும்பிகள், இந்த படத்துக்கு போகாதீங்க)

புலித்தமிழனும் பூனைத்தமிழனும்..


பக்கத்து நாட்டுல புலிகளா இருந்ததாலவோ என்னவோ.. தமிழ்நாட்டுல நாம எல்லாரும் பூனை மாதிரி திரியுறோம். நேரடியா விஷயத்துக்கு வருவோம். மலையாளி  மாதிரியோ, சிங் மாதிரியோ நம்ம இரத்தத்த, நம்ம இனத்தவன காக்குற அந்த குணம் நம்ம கிட்ட இல்லாம போச்சு. விளைவு. கண்ணு முன்னால லச்சம் லச்சமா கொன்னு குமிச்சானுங்க. பொம்பள புள்ள, உயிர் இல்லாத உடல்னு பாக்காம நரமாமிசம் தின்பதை விட கொடுஞ்செயலாக கருதப்படும் “necrophilia” என்ற சைகோ குணாதிசியத்த காட்டுனானுங்க.
நம்ம வீட்டு புள்ளையா இருந்தா ஒவ்வொருத்தனும் கத்திய தூக்கிட்டு கெளம்பிருக்க மாட்டோம்?? அத தான் செஞ்சாங்க போராளிகள். ராஜீவ் கொலை என்னும் மர்ம சரித்தரத்தின் கடைசி பக்கங்களில் இவர்களின் இரத்தத்தை ஊத்தி மறச்சாச்சு..  சரி. இப்ப கடைசி கடைசினு எல்லைல வடகிழக்கு இந்தியால சீனா இன்னும் தன் அராஜகத்த நிறுத்தாம, இலங்கை சீனாக்கு “Strategic Stonghold” என்று அழைக்கப்படும் அதிமுக்கிய இராணுவ தளவாட மையங்கள நிறுவ இடம் கொடுத்து இந்தியா முதுகுல குத்தின அப்புறமும் இவன், இந்த SM Krishna, இலங்கைக்கு எதிரா இந்தியா போர்க்குற்ற தீர்மானத்துல கையெழுத்து போட போறது மாதிரி ஒரு தோற்றத்த கொடுத்து , இலங்கை ராஜதந்திர குழுவ இங்க வரவச்சு பேசினான். இப்ப, இன்னிக்கு march 3, 2012ல இலங்கைக்கு எதிரா கொண்டு வரப்பட்ட தீர்மானத்துல, இவன் இலங்கைக்கு  ஆதரவா செயல்பட்டிருக்கான்.. அப்படி என்ன பேசுனிங்க உங்க ராஜதந்திர கூட்டமைப்புல?  இத்தனை கோடி தமிழங்கள நீங்க நம்பிக்கை துரோகம் பண்ண வைக்க அவன் உங்களுக்கு என்ன கொடுத்தான்? சீனாவ வெளியெத்த போறானா?? இல்ல.  சர்வதேச அரங்குல ஐ.நா பாதுகாப்பு கூட்டமைப்புலனு  இந்தியாக்கு ஆதரவான நிலைய எடுக்க போறானா?? எடுக்கல. அப்புறம் என்ன மயித்துக்குடா  தேசியம் தேசியம்ன்னு சொல்லி எங்கள கொன்னீங்க? கொலைகார பாவிகளா..  துப்பாக்கி மட்டும் இல்ல, அத புடிச்ச கையும் உங்களோடது தானா?? அந்த உண்மை தெரிஞ்சா நாங்க உங்கள தோக்கடிபோம், ஆட்சில இருக்கவிட மாட்டோம்னா நெனச்சிங்க?
அந்த அளவுக்குலாம் நாங்க “worth” இல்லப்பா..
என்னதான் பெரிய ராஜதந்திர “Foreign Policy” யா இருந்தாலும், இங்கன இருக்கிறவன் நல்லதுக்கும் சேத்து தான அந்த எழவு பாலிசி ?? அப்ப ஈழத்தமிழன் செத்தது எங்க நல்லதுக்காகவா??
போர் குற்ற நடவடிக்கை இலங்கை மேல எடுக்கப்பட போறது இல்ல. ராஜபக்சே உள்ளிட்ட ஒரு கூட்டத்து மேல தான?? நீ என்ன பண்ணிருக்கலாம்? இன்னோரு பொம்மை அரசாங்கத்த வரவச்சு உன் சாம, தான, பேத, தண்ட பலத்த காமிச்சிருக்கலாம்? சீனாவையும் விரட்டிருக்கலாம்? Interests of ‘Intelligence Bureau, External Affairs, Foreign Policy, Internal Affairs, Regional Stability’ எல்லாம் கிடைச்சிருக்கும்.. அத செய்யல. இதையெல்லாம் யோசிக்கும் போது, உங்க நிலைல அம்பானி, மிட்டல் போன்ற பெரு முதலாளிகளோட ஒன்றுபட்ட இலங்கையின்  வியாபார சந்தைக்கான விருப்பம் தான் தெரியுது. தனி ஈழமோ சின்ன சந்தை தானே?? பொம்மை அரசாங்கம் alibi தர வேண்டி உங்கள் விருப்பங்களை நிறைவேத்த தயக்கம் காட்டுமே?? சாயம் வெளுத்துருமே??
போர்ல சாக கொடுத்துட்டு, அப்படி ஏதும் நடக்கவே இல்லனு சொல்ற ஒரு நாட்ல வாழ்ந்துகிட்டு இருக்கிற நாம எல்லாரும், அரசாங்க எதிரியென முத்திரை குத்தபடாமல் நமது விருப்பத்தை நிறைவேற்ற ஒரு வழி உள்ளது. நீங்கள் இதனை செய்ய காவல்துறைக்கோ, மற்ற அரசு படைகளுக்கோ பயப்பட தேவையில்லை. போகிற போக்கில் செய்ய முடியும் இந்த காரியத்தை செய்தீர்கள் என்றால் உங்கள் தமிழ் இரத்தமும், சுயநலமும், மனசாட்சியும் சேர்ந்து வெற்றியடையும். இதற்குமுன் எழுந்த எழுச்சி எல்லாம் வீழ்ச்சி அடைந்ததற்கு அரசியல் அமைப்பும், நமது தயக்கமும் மட்டுமே காரணம்.. இப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, தமிழக மீனவனுக்கும் நாம் நேர் செய்து தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது குறைகளையும் தாண்டி இதை எப்படி சாதிக்க??
அதற்கு முன் சில விஷயங்கள்.
1) இலங்கை கிழக்கும் மேற்கும் ஓடும் கடல் வணிக வளையத்தில் முக்கிய கன்னியாக இருக்கிறது. கிழக்கில் எண்ணை வளம் மிக்க நாடுகள். மேற்கில் மற்ற அனைத்திலும் வளம் மிக்க நாடுகள்.
2) இந்தியாவை சேர்ந்த இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வருவாய் வழி முக்கிய  மார்க்கம் என இலங்கையை நிர்ணயித்து உள்ளன.
ICICI Bank. Infosys. TVS & Sons Ltd. Griffith Laboratories Ltd. Alstorm Projects India Ltd. Brigade Hospitality Services Ltd. Srei Infrastructure Finance Ltd.
3) அதிலும் சில பன்னாட்டு நிறுவனங்கள் “Conglomerate” ஆக உருப்பெற்றுள்ளன..
CEAT-Kelani Associated Holdings, Mackwood Infotec, GTB Colombo, Ceylon Ambuja Cement, Taj Lanka Hotels, Bensiri Rubber Products. Asian Paints & Ceylon Glass Company Lanka Ashok Leyland, Mphasis, Lalith Gangadhar Constructions.
இதில் கவனிக்க தக்கது, இந்தியாவை சார்ந்த public ltd உம் இலங்கையில் கோலோச்ச காத்திருப்பது. Power Grid Corporate India, National Thermal Power Corporation, Indian Oil Corporation.
4) இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையின் சந்தையை மட்டுமல்லாது  வளத்தையும் கண் வைத்துள்ளன. இலங்கையில் இவர்கள் எதிர்பார்ப்பது   steel, rubber, cement, power & energy, oil exploration, production, telecom, real estate, tourism, computer software. கல்வி தொழிற்சாலையும் அங்கே மாபெரும் வரவேற்பை பெரும்.
இதை எல்லாம் படித்த உடன் என்ன தோன்றியது?? அதே தான்.. இலங்கை இனப்படுகொலையை இந்தியா ஆதரித்தற்கும், தமிழ் விரோத போக்கை கடைபிடிபதர்க்கும் ஒரே காரணம் தான். இவற்றை வைத்து லாபம் அடைபவன் கொடுக்கும் எச்சில் காசு. Blood Money. குடிமக்களையே இந்த எச்சில் காசுக்காக  ராணுவம் அனுப்பி கொல்ல தயங்காத அரசாங்கமப்பா இது. POSCO, VEDANTA போன்ற நிறுவனங்கள் ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநில பூர்விக குடிகளின் ரத்தத்தில் குளிக்க நினைக்கிறதோ அதே போலத்தான் ஈழத்தில் நாம் மேலே பார்த்த நிறுவனங்கள். CRPF உயர் அதிகாரி இந்த மாநில CIVIL UNRESTக்கு தீர்வாக  இலங்கை படுகொலையை மேற்கோள் காட்டியதை நினைவு கூறுங்கள்..
இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது நமது எண்ணம் ஈடேற இந்த சதிவலையை அறுக்க வேண்டியது புரிகிறது. அறுக்க வேண்டிய இடமும் தெரிகிறது. உங்கள் எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் இந்த நிறுவனங்களின் மேல் காட்டுங்கள். தமிழ்நாட்டு தமிழனும், அகில உலக தமிழனும், ஈழத்தமிழனும் ஆக இவர்களின் சந்தையில் ஒரு பெரிய பங்கை நிர்மூலம் ஆக்குங்கள். இவர்கள் எதிர்பார்க்கும் உங்கள் சூழல் சார்ந்த பொருள் மூலத்தை இவர்களின் போட்டியாளர்கள், நமக்கு குழிபறிக்க துநியாதவர்களுக்கு கொடுங்கள். இவர்களின் ஆட்டத்தின் எதிரிகளை நமக்கு உறவாக்குங்கள்.
Airtel, Ashok Leyland, TVS, Infosys, TAJ, Reliance, IOC. நன்றாக கவனியுங்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு தமிழன் தரும் பணத்தை நம்பியும் தொழில் செய்கிறார்கள். நாம் இந்த  நிறுவனங்களை பயன்படுத்தாமல் புறக்கணித்தால் இவர்களின் வருவாய் வழி தடைபடும். அப்பொழுது அதற்கான காரணம் இவர்களின் இலங்கை விருப்பு, அதனால் தமிழன் அடைந்த  வெறுப்பு என தெரியும். உயிர்பிழைத்த மீதி தமிழனுக்காக என்று வருவார்கள். அதை தருகிறோம். இதை செய்கிறோம் என்று. எங்கே?? நாம் வீடு கட்ட கொடுத்த காசே அவர்களை அடைய காணோம். இதில் இவன் தொழில் செய்து, அதில் என் இனம் விருத்தி அடையவா?? சிங்களன் கை கட்டி வேடிக்கை பார்ப்பானா?? விட மாட்டான். அதற்குரிய முகாந்திரங்களை செதுக்கி கொள்வான். கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அவரவர் மண்ணின் மைந்தருக்கே பெருநிறுவன வேளைகளில்  முன்னுரிமை. இதை சிங்களன் எப்படி திரிப்பான் என நாம் அறியாததா?? அதே நேரத்தில் இந்த முதலாளிகள் நம் இனத்தவனுக்கு பிச்சை போடவும் வேண்டாம். கொஞ்ச நாளில் சுதந்திரத்துடன் அவர்களே அவர்கள் சோற்றுக்கு வழி செய்து கொள்வார்கள்.
நமது இந்த முடிவு எல்லாருக்கும் தெரிந்தே இருக்கட்டும்.
தானாக இந்தியா தனது கொள்கையை மாற்றும் கண்கட்டு வித்தையை காணலாம். வேறு வழி இல்லாத இந்த முதலாளிகள், மிச்ச வியாபார நோக்கில்  ”lobbying” செய்வார்கள். அதில்  நமது நோக்கம் நிறைவேறும். இழந்த நமது உறவுகள் போக இருப்பவர் இனி நிம்மதியாக வாழவும்; நமது உறவை அறுத்தவர்கள் அதற்குரிய தண்டனை அனுபவிக்கவும் இதுவே நல்வழி.. இப்போதைக்கு.. இதை முதலில் செய்து முடித்து அடுத்து வருவதை பார்க்கலாம். இதன் மூலம் நாம் இந்த நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு ஒரு முக்கியமான செய்தி சொல்லப்படும். நமது ஒன்றுபட்ட லட்சியமும், நமது தெளிவும் பிழையின்றி கார்பரேட் புத்தகங்களில் ஏற்றப்படும். தமிழக மீனவனை எவனாவது அடித்தால் அவனை இந்திய நாட்டின் சட்டம் வளைக்கும். நாமும் இறந்தவர் குடும்பத்திற்கு கோடி கணக்கில் பணம் வாங்கலாம்.. எத்தனை கோடி கொடுக்க முடியும் அவனால்?? இந்திய அரசு தன்னுடைய வருமானம் தடைபட்ட அடுத்த நிமிடம் கொடுப்பதை நிறுத்தி விடும்.. சீனாவை பற்றிய கவலை நமக்கு வேண்டாம்.. நம் இனத்தவனை கொல்வதற்கு முன் இந்த அரசாங்கம் இதை யோசித்திருக்க வேண்டும். சீனா மேலும் வலுவாய் காலூன்ற முயற்சிக்கும் போது இந்த இந்தியனுக்கு  தமிழீழம் பிடிக்கும்.. நல்லது நடக்கும்..
(இந்த பதிவை உங்கள் பதிவுகளில் எடுத்து கொள்ளுங்கள். எதையும் திரிக்காதீர்கள். உங்கள் சமூக தளங்களில் பகிருங்கள். உயிர் பிழைத்த தமிழனுக்காக இதாவது செய்வோம்.)
Post by: Venkatesh Pandian