Wednesday, November 13, 2013

கடலை மிட்டாய் - ஒரு சிறப்பு விமர்சனம்

முன்குறிப்பு:
வாசிக்கும்போதே மொக்கையாக இருந்தால் நேராக இறுதிப்பகுதியான டிஸ்கி செல்லவும்.

அண்மைக்காலமாக கடலைமிட்டாய் சாப்பிடவேண்டுமென்ற எண்ணம் மனதை லோ-பேட்டரி அலர்ட் கண்டதுபோல் அரித்துக்கொண்டிருந்தது. சாப்பிட தக்கசமயம் கிடைக்குமென மனதை ஒருவாறாக ஆசுவாசப்படுத்தி வைத்திருந்தேன். இதற்குக்காரணம் எங்கள் ஏரியாவில் பெட்டிக்கடைகள் மிகவும் குறைவென்பதே.

தி.நகர் சென்றிருந்தபோது பெட்டிக்கடையொன்றில் பாட்டில் நிரம்ப Burj Dubai கட்டிடம் போன்றதொரு வடிவத்தில் எகனை மொகனையாய் கடலைமிட்டாய் அடுக்கிவைத்திருப்பது கண்டதும் அக்கடையின் வாசலுக்கு சீறிப்பாய்ந்தேன். ஐம்பது ரூபாய்க்கு கேட்டதுகண்டு கடைக்காரர் ஓர் அதிசயப்பார்வை வீசி... பின் பாக்கெட்டே இருக்குங்க முப்பது ரூபாய் எனச்சொல்லியவாறே நீட்டினார். வாங்கிக்கொண்டு அங்கிருந்த வேலைகளை முடித்தபின் கடலைமிட்டாய் சாப்பிடப்போகும் தருணத்தை எண்ணியவாறே அறைவந்து சேர்ந்தேன்.

மனிதர்களைப் போலல்லாமல் ஒளிவுமறைவற்ற தன்மையிலேயே கடலைமிட்டாய் பேக்கிங் இருப்பது ஏனென என்றாவது யோசித்திருக்கிறீர்களா! இன்றளவும் தென்னகத்தில் குடிசைத்தொழில் என்றவுடன் ஊறுகாய், பீடி சுற்றல் வரிசையில் கடலைமிட்டாய் இடம்பிடிக்கிறது.

பாக்கெட்டில் கையில் வேல் ஏந்தி குழந்தைவடிவத்தில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தான். "கண்ணன் ஸ்வீட்ஸ், ....." என சிவப்பு வண்ணத்தில் தயாரிப்பாளரின் முகவரி. இவர்கள் கடலைமிட்டாய் மட்டுமின்றி பின் நவீனத்துவ ஸ்நாக்ஸ் படைப்புகளில்கூட சிறந்தவர்கள். இவர்களது பிற படைப்புகளின் ரசிகன் எனச்சொல்லிக் கொள்வதில் பெரும் கௌரவம் எனக்கு.


பாக்கெட் பிரித்து உண்ண ஆரம்பித்ததும் நான் இந்த உலகத்திலேயே இல்லை. எனைச்சுற்றி சினிமாவில் வருவது போன்று புகைசூழ்ந்த சொர்க்கமே உண்டாகிவிட்டது. என் வாழ்நாளில் மறந்துவிடவே முடியாத அளவுக்கு மொறுமொறுவென்று அலாதியான சுவையுடையதாக இருந்தது அந்த கடலைமிட்டாய். இந்த இடத்தில்தான் 'கண்ணன் ஸ்வீட்ஸ்' பேரைத் தட்டிச்செல்கிறார்கள். என்றுமே அவர்கள் சோடை போனதில்லை. கடலைமிட்டாய் உலகின் தன்னிகரற்ற சக்கிரவர்த்தி அவர்கள். கடலைமிட்டாய் உண்ணும்போதெல்லாம் குழந்தையாகிப்போகிறேன். நீங்களும் சாப்பிடும்போது இதை உணர்வீர்கள் என நம்புகிறேன். இனி கொஞ்சநாளைக்கு இந்தச்சுவையின் தாக்கத்திலிருந்து என்னால் அவ்வளவு எளிதாக மீளமுடியாது என நம்புகிறேன்.

கடலைமிட்டாய் செய்முறை:
பாதியாக உடைத்துவைத்த கடலைகளை நன்றாக வறுக்கவேண்டும். வெல்லத்தை சரியான பதத்தில் காய்ச்சவேண்டும் (சரியான பதம் என்பது குறியீடு. தேவையான அளவு உப்பு என்பதுபோல இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாதது. அவ்வ்). சரியான பதம் வந்ததும் வறுத்த கடலையை அதில் கலந்திடவேண்டும். இல்லாட்டி எல்லாமே வேஸ்ட்டாகிடும். செவ்வக அல்லது சதுர வடிவ பலகையில் இதை நிரப்பி கத்தியால் கோடுகிழித்து ஆறியதும் பிரித்தெடுத்தால் சுவையான கடலைமிட்டாய் தயார்.

பொருள் - கடலைமிட்டாய்;
தயாரிப்பாளர் - கண்ணன் ஸ்வீட்ஸ்;
விலை - ரூ.30/-

டிஸ்கி:
 

தொன்றுதொட்டு இந்த டெம்ப்ளேட் விட்டா புத்தக விமர்சனம் எழுதவே முடியாதா?! என்றொரு கேள்வியை புத்தக விமர்சகர்களுக்கு வைத்துக்கொண்டு இந்த (மொக்கைக்)கட்டுரையை (!!!!) முடிக்கிறேன். முடியல.

Friday, October 11, 2013

தலைப்பில்லாக் கவிதை

கம்பியின் ஜீவனற்ற கன்னி
அறுந்ததில்
முறிந்தது தற்கொலை முயற்சி.

உலகின் பார்வையில் தப்பித்து
ஒளிந்துகொள்ளும்
இருள் நேரமானதால்
இத்தோல்வி
விமர்சனமேதுமற்றுப் போனது

கிழியும் காகிதமெனத்
தலைப்பிட்ட
மரண அஞ்சலிக்கவிதையை
மிகப்பத்திரமாக புத்தகத்தோடு
பதுக்கி வைக்கிறேன்.

அடுத்த தற்கொலை முயற்சியின்
வெற்றியில் அப்புறப்படுத்துங்கள்
வாழ்வில் தோற்றவனின்
நாக்குதள்ளிய பிரேதத்தை
அவனின் கடைசி வார்த்தைகளுடன்

Saturday, August 31, 2013

அவன் நண்பனா கிடைக்க...

'அவனைமாதிரி ஒருத்தன் நண்பனா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்'. இந்த டையலாக்க எல்லாரும் ஒருமுறையாவது பயன்படுத்திருப்போம். ஆனா நான் அதிகம் உபயோகப்படுத்திருக்கேன். ஆறு. அவன் நண்பனா கிடைக்க...

காலேஜ்மேட், அண்ணன், வெல்விஷர் இப்படி அவனுக்கு என் லைப்ல ஏராளமான ரோல்ஸ். விஜய் ரசிகன். இல்ல இல்ல விஜய் வெறியன். ஆனா விஜய பிடிக்காதவங்களுக்கும் இவன புடிக்கும். ATM பார்த்துட்டு படம் மொக்கைடான்னு ஆரம்பிச்சு ஆனா... (இந்த ஆனா என்பதுதான் அவனிடத்தில் உள்ள ஸ்பெசாலிட்டி) அந்த குழந்தை கவிதை கேட்கிற சீன்ல வாய்க்கு வந்தத ப்ளோவா 'நீயும் நானும் ஒண்ணு..இது காந்தி பொறந்த மண்ணு.. டீ கடைல நின்னு தின்னு பாரு பன்னு...' விஜய் சொல்லுவார். குழந்தை கவிதை சூப்பர்ன்னு சொல்லி போய் பரிச தட்டிட்டு வந்துரும். விஜய் அந்த சீன்ல செம்ம சார்மிங் தெரியுமா? க்ளைமேக்ஸ் வரை இயக்குனரே திரைக்கதைல சுவாரசியமா சொல்லமுடியாத படத்தையும் வெகுசுவாரசியமா சொல்லி முடிப்பான்.

'போடா மயிரு... இதெல்லாம் ஒரு பிரச்சினையா?' எதுவானாலும் இதான் அவனோட அறிவுரையா இருக்கும் பெரும்பாலும். ஆனாலும் மனசுக்கு ஏதாவது கஷ்டம்ன்னா மானமாவது மயிராவதுன்னு அவன்கிட்டதான் முதல் ஆளா போய் நிப்பேன். ஏனோ மனசு லைட்டா பாரமா இருக்குறமாதிரி இருந்ததால 'டேய் மீட் பண்ணலாமா?' '............' 'இல்ல. நானே அங்க வர்றேன்'. சென்னை டிராபிக் ஒத்துழைத்ததால் அடுத்த ஒரு மணிநேரத்திலேயே(?!) அவன் அறைக்கதவை தட்டினேன்.

பிள்ளையார் கோவில்களுக்குப் போட்டியாக சென்னைமுழுக்க தெருவுக்குத் தெரு கடை பரப்பியிருக்கும்... ஒடுங்கலான நாயர் கடை ஒன்றுக்குச்சென்று டீ சொல்ல... 'வீட்ல போட்ற டீயில நுரை பொங்கும். இங்க பொங்கிய நுரைய டீயில போடறாங்க'ன்னு நான் மொக்கையா ஏதோ முயற்சிக்க... மெல்லியதாய்ச் சிரித்துவைத்தான்.



மெரினாவிற்கு அருகில் வசிப்போரைப் பொருத்தவரை கடற்கரை என்பது ரேசன் கார்டில் சேர்க்கப்படாத மற்றொரு குடும்ப உறுப்பினர். பிடித்தமான ஒருவருடன் ஒருமுறையாவது கடற்கரையில் நடந்திருந்தால் இந்த வரிகளைப் படிக்கும்போது நிச்சயம் அந்தத் தருணம் மீண்டும் நிகழ்ந்தேறியிருக்கும் உங்களுக்கு. அப்படித்தான் அவனுடன் நடந்த பொழுதுகளை அசைபோடுகிறேன் தற்போது.

கடலைநோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம். எதுவும் பேசவில்லை. சிலநிமிடங்கள் மௌனத்தை ஒரு பூவினைப்போல பிடித்திருந்தோம். 'ம்ம் சொல்லுடா. என்னாச்சு?' என்றவன் கேட்டதில் பூ உதிர்ந்தது. எல்லா பிரச்சினையையும் 'அது ஒன்னுமில்லடா' என்றே ஆரம்பித்து சொல்லிப்பழகியிருந்தேன். (அவன் கொடுக்கும் அறிவுரையில் கடைசியில் அதுவெல்லாம் ஒன்னுமே இல்லடா என்றாகிவிடுவது தனிக்கதை).

அந்த நேரத்தில்தான் சிரித்தபடி, கடலின் அலைகளில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் பக்கம் விரலை உயர்த்தினான். கவனித்தேன். என்னளவில் அவன் ஆகச்சிறந்த அவதானி. சின்னஞ்சிறிய விசயத்தையும் மிகக்கூர்மையாய் கவனித்து சொல்வான். ஆண் குழந்தை ஒன்று வேகமான அலைகள் வரும்போது அலைக்கு முன்னதாக கரையை அடைவதும் பின் வந்த அலை திரும்புகையில் அதை விரட்டுவதுமாக விளையாடிக்கொண்டிருந்தது.

நேரம் செல்ல செல்ல அலையின் மேல் பயமில்லை. அதுவரை நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அவன், சரியாக அலை மோதும்போது தன் டயாப்பர் புட்டத்தை திருப்பிக் காண்பித்து அலையோடு விளையாடிக்கொண்டிருந்தான். அந்த தேவ கணத்தில் உதிர்ந்த அவன் சிரிப்பின் உயிர்ப்பை பருகியோருக்கு அமுதம் என்பதெல்லாம் கப்சா.

இப்போது ஆறு ஆரம்பித்தான். 'பார்த்தியா? அந்த பையனோட அப்பாம்மா தவிர்த்து வேற யாருமே இப்படி ஒரு சந்தோசமான காட்சிய கவனிக்கல. இப்படிதான் வாழ்க்கைல கஷ்டங்களுக்கு நடுவுல நமக்கு கிடைக்குற... இல்லாடி நம்மால ஏற்படுத்திக்க முடியுற சந்தோசத்த நாம கவனிக்காம் விட்டுடறோம் இல்ல!'. எனக்குள் பல்பு எரிந்தது.

பிரச்சினையை சொல்லும் முன்பே இது அவன் தரும் அறிவுரையாபட்டது. உண்மைதான். ஸ்கூல் படிக்குறப்ப லாங்-லீவ் முடிஞ்சு பள்ளி திறப்பதற்கு முதல்நாள் வேப்பங்காயா கசந்தது. இரண்டுநாட்கள் பள்ளி சென்று திரும்பிட்டா அப்புறம் காய்ச்சல் வந்தாலும் பசங்களோட இருக்குறதுதான் ஜாலின்னு லீவ் போடாம ஸ்கூல் போவோம். (இதன் மூலம் சொல்ல வருவதென்னவென்றால் காய்ச்சல் வந்தபோதும் நான் பள்ளி சென்றிருக்கிறேன். நோட் திஸ் ஐ சே).

'ம்ம். சொல்லுடா நீ ஏதோ பேசனும்ன்னு வந்த...'.

'இல்லடா சும்மாதான். நாம பேசி நாளாச்சேன்னு வரட்டுமான்னு கேட்டேன்'.

'வேற ஒன்னுமில்லையே?! பாரு. டக்குன்னு கிளைமேட் சேஞ்ச் ஆகிடுச்சு. இன்னொரு டீ சாப்பிடலாமா?'

உண்மையில் க்ளைமேட்டைவிடவும் நான் அதிகம் சில்லென மாறியிருந்தேன். லவ் யூ டா ஆறு. இங்க டீ சூப்பரா இருக்கும்டா என்றபடி அவன் டீயை நீட்டினான். புண்பட்ட மனதை டீ விட்டு ஆற்ற ஆரம்பித்தேன்.

சரி இப்ப எதுக்கு இந்த கதையெல்லாம் எங்களுக்கு சொல்ற? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம்.
1.இன்று ஆறுவிற்கு பிறந்தநாள். அவனுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
2.அவனமாதிரி ஒரு நண்பன் கிடைக்க...
3.எனக்கு இப்ப தூக்கம் வரல. எழுதணும்ன்னு தோனுச்சு. எழுதிட்டேன்.

எல்லாம் சரி. என்ன பிரச்சினைக்காக ஆற சந்திக்கப்போன? அதப்பத்தி சொல்லவே இல்லையே! - இது உங்களின் அடுத்த கேள்வியாக இருக்கலாம். எப்படி பாஸ்? ஆறுவிடமே சொல்லாத அந்தப் பிரச்சினையை உங்களிடம் மட்டும் சொல்லிவிடப் போகிறேனா என்ன?! நெவர்.

அவனைமாதிரியே 'போடா மயிரு' என மனதளவில் திட்டிக்கொள்ளுங்கள். கமெண்ட் பாக்ஸ் புனிதமானது.

Tuesday, August 27, 2013

அனிருத் என்கிற ராட்சசன்:

இது யூத் ஐகான் அனிருத்தின் வணக்கம் சென்னை பாடல்களைப் பற்றிய விமர்சனம் அல்ல. விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.



இசைஞானி, இசைப்புயல், 100 வது ஆல்பம் இசையமைத்திருக்கும் இளைய'ராஜா, இமான் (எல்லாமே 'இ' மயமா இருக்கோ!), நாம் தமிழில் பயன்படுத்தாமல் விட்டு கேரள விருதினைப்பெற்ற வித்யாசாகர், இவர்கள் மத்தியில் இசையமைத்தது மட்டுமில்லாமல் மெகா ஹிட்டும் கொடுத்த அனிருத் பற்றியே இந்தப்பதிவு.

வொய் திஸ் கொலைவெறி? என்ற கொலைவெறி ஹிட் கொடுத்து யார் இது என மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த ராட்சசன் இந்த அனிருத். இந்தப்பாடலுக்கு 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் யூடியூப்பில். அதன்பின் '3' படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய்க் கொடுத்து... சொல்லப்போனால் இப்போதெல்லாம் 'வொய் திஸ் கொலைவெறி?' பாட்டைக்கேட்டால் நமக்கு பத்திக்கொண்டு வருகிறது. மற்ற பாடல்கள் இன்றும் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

சரி. ஒரு படம் ஹிட் கொடுத்தாயிற்று. சர்வைவல் வேண்டுமே. ஃபீல்டில் நிலைத்து நிற்கவேண்டுமே! டேவிட் படத்திற்கு இசையமைத்த ஒரே பாடலான தமிழ் வெர்சன் - 'கனவே கனவே' / ஹிந்தி வெர்சன் 'Yun Hi Re' அனைவரையும் (அனைவரையும் என்பது நடுநிலையான... எனக்குப்பிடித்த ஒரே ஒரு இசையமைப்பாளர் இசையமைப்பது மட்டுமே இசை என எண்ணாத மற்றவர்கள்) கவர்ந்தது. இதெல்லாம் போதாதே. முழுக்க முழுக்க ஹிட் வேண்டும். அதைத்தான் தனது அடுத்த ஆல்பமான எதிர்நீச்சலில் செய்துகாட்டினார் அனிருத்.



'3' மற்றும் 'எதிர்நீச்சல்' படத்திற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியான 'நீதானே என் பொன்வசந்தம்' மற்றும் 'கடல்' ஆகியவை மனதிற்கு நெருக்கமாக இருந்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

என்ன இல்லை எதிர்நீச்சலில்? மெலடியா? குத்துப்பாட்டா? ராப்? டூயட்? எல்லாம் கலந்துகட்டி கொடுத்து, தன் இசையறிவை டியூன்களில் ரொம்ப ரொம்ப ஊற்றி பருகக்கொடுத்தானே இந்த ரட்சகன்.

நிற்க. 22 வயதான ஓர் இளைஞன், லெஜெண்ட்களுக்கு மத்தியில் போட்டி போடுவது என்ன அவ்வளவு சாதாரணமா? ஆனால் மிகச்சாதாரணமாக செய்துகொண்டிருக்கிறானே இந்த ராட்சசன்.

எனக்கு அனிருத் இசையை ரொம்ப பிடித்திருக்கிறது. 80-களுக்குப்பின் பிறந்த யாருக்குத்தான் பிடிக்காது?! இதோ இசைஞானியின் மேகா பாடல்கள் வெளியான இந்தத்தருணத்தில் 'வணக்கம் சென்னை' என படையப்பா ரஜினி சல்யூட் அடிப்பதைப்போல செம்ம ஸ்டைலிஷாக வந்து நிற்கிறானே தலைவன்.

'அந்த' முத்தக்காட்சி புகைப்படங்கள் வெளிவந்தபோது தூக்கமிழந்து, பப்புல்கம் போல நீ கடித்திழுக்க அந்த உதடுகள்தான் கிடைத்தனவா என மனம்குமுறி சூனியம் / செய்வினை வைக்கக் கிளம்பிய கோடான கோடிப்பேரில் நானும் ஒருவன்தான். ஆனால் தன் இசையால் எங்களை அல்லவா கட்டிப்போட்டாய் நீ!

இனி விசயத்துக்கு வருவோம். (அப்ப நீ இன்னும் ஆரம்பிக்கவேயில்லையா என்போர் பொறுத்தருள்க). இசையை ராஜா என்றும் ரகுமான் என்றும் பிரித்துப்பார்ப்பதே மோசமான மனநிலை. அதைப்போலவே பட்டியலிட்டு தரம்பிரிப்பதும். சென்னை சிட்டி கேங்க்ஸ்டா பாடலில் கொஞ்சமே கொஞ்சம் கங்க்னம் ஸ்டைல் இசை கலந்திருக்கிறது. ஆனால் யூத் அனைவருக்கும் சென்னை தேசியகீதமாக மாறும் அனைத்துத் தகுதிகளும் இந்தப்பாடலுக்கு உண்டு. கிராமிய சாயல் கொண்ட பாடல் இசையமைக்கத் தெரியுமா உங்க அனிருத்துக்கு? என்ற விமர்சனத்தை ஒசக்க ஒசக்கவில் தகர்த்தெரிந்திருக்கிறார். இதற்காகவே வைரமுத்துவின் குட்டி (குட்டி வைரமுத்து. :P ) மதன் கார்க்கி கிராமத்துச் சொல்வழக்கில் பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தப்பாட்டில் நேட்டிவிட்டி இல்லையே என்போர் கோட்டைவிட்டு வெளியே நிற்க. உங்க கிராமத்துல கங்க்னம் ஸ்டைல் நுழைந்து ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதே நிதர்சனம். கொடியை உயர்த்திப்பிடிக்காதீர்.

எங்கடி பொறந்த எங்கடி வளர்ந்த? எங்கடி? எங்கடி? என ஆரம்பித்தாலே திருட்டுக்குமரனின் இந்தப்பாடல் நினைவுக்கு வருவதை யாராலும் மாற்ற முடியாது. அதுமட்டுமில்லாமல் உதடுகடித்த... ச்சே. உள்ளம்கவர்ந்த ஆண்ட்ரியாவும் அனிருத்தும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள் இந்தப்பாடலை. இதுபோக 'ஓ! பெண்ணே' 'ஹேய்' எல்லாம் அனிருத்தின் அக்மார்க் சாயல் கொண்ட டூயட்கள்.



அனிருத்தின் பாடல்களில் ரசிகன் கொண்டாட்ட மனநிலைக்குப் பயணிக்கிறான். வாழ்விற்குப் புத்துயிர் கொடுத்து, உண்ணும் சாக்லேட் தீர்வதற்குள் அடுத்த சாக்லேட் கிடைக்கப்பெற்ற குழந்தையின் மனநிலைக்குச் செல்கிறான் ரசிகன். அவ்வகையில் 'வணக்கம் சென்னை' நெரிசல் மிகுந்த பேருந்தில் பயணிக்கையில் கிடைக்கப்பெற்ற சன்னலோர இருக்கைபோல் நச்சென்று கிடைத்திருக்கிறது இசை ரசிகனுக்கு.

வணக்கம் சென்னை டீசரில், கடைசியில் 'An Anirudh Musical' என வரும். ஆமா அதுக்கு என்ன இப்ப?! எனக் கேட்கிறீர்களா? அதெல்லாம் தெரியாது ரசனை அண்ணன் இப்படி சொல்லித்தான் இந்தப்பதிவை முடிச்சிருக்கார். அவ்வ்வ்வ்வ்வ்.

Monday, August 26, 2013

ஊர்சுற்றியின் தாழங்குப்ப பயண அனுபவம்

பொதுவா தென்தமிழகத்தில் இருந்து வரும் எல்லாரும் சென்னைலாம் ஒரு ஊரா பாஸ்?! அப்படின்னு சலிப்பா சொல்றது ஒரு டிரென்ட்டாவே ஆகிடுச்சு. நானும் தென்தமிழகத்தச் சேர்ந்தவன்தான். ஆனா எனக்கும் சென்னைக்கும் புலப்படாத ஏதோவொரு பந்தம் உண்டுபோல.

பஸ் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக்கடந்த பிளாட்பார்மை என்றாவது ஒருநாள் சீக்கிரம் கிளம்பி மெதுவாகக் கடந்தால் அடிமனசுல இருந்து ஒரு சந்தோசம் வருமே, அப்படித்தான் வாரம் முழுக்க பரபரப்பாக இருக்கும் சென்னையை ஞாயிறன்று அதிகாலை சீக்கிரம் எழுந்து சுற்றிவருவதும். பொதுவாக அதிகாலை நேரத்தில் எந்த ஊரும் / நகரமும் அழகு! சென்னை பேரழகு.

இப்படியாக ஒரு ஞாயிறின் அதிகாலை 4 மணிக்கு குளித்துக் கிளம்பி என்னூருக்கு அருகிலிருக்கும் தாழங்குப்பம் பகுதிக்குச் சென்றதைப் பற்றிய பதிவுதான் இது. (அவ்வளவுதானா என நினைப்பவர்கள் இத்தோடு வாசிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்)

புகைப்படக் கலைஞர்களுக்கு இது ஓர் சொர்க்கபுரி. அப்புறம் ஏன்டா நீ போனன்னு கேட்கக்கூடாது. இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கு. கைவசம் 8 MP கேமரா வசதியுள்ள மொபைல் இருக்கு. (இதவச்சுதான் ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கேன்). உடன் அசல் புகைப்படக் கலைஞர்களான கண்ணனையும் (பிசாசுக்குட்டி என்ற புனைப்பெயருக்கு ஏற்ப ட்விட்டரில் அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு திரிவானே அவனேதான்) தமிழ்க்குமரனையும் (@karpadhu_tamil) அழைத்துக்கொண்டு சென்றாயிற்று. வயசுல சின்னப்பசங்கள சேர்த்துக்கிட்டு ஊர்சுத்துரதுல பலநன்மைகள் இருக்கு. அதைப்பற்றி இன்னொரு பதிவே எழுதலாம். அவ்வ்.

(@karpadhu_tamil & @pisasukkutti)
 
4 மணிக்கு அடையாரிலிருந்து கிளம்பிய நான் மிகச்சரியாக 4.30 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேசன்ல இருந்தேன். இதுவே பீக் ஹவர்ன்னா அடையாரையே தாண்டிருக்க மாட்டேன். பொன்னியின் செல்வன் படிக்குறப்ப எப்படி ஒரு தனி உலகத்துல பயணிச்சிட்டு வந்தோமோ அதேமாதிரிதான் சென்னை MRTS-ல் பயணிப்பதும். அதை மையமா வச்சு தனி உலகமே இயங்கிக்கிட்டு இருக்கு.

இந்த இடத்துல ஒரு டிப்ஸ் சொல்லியே ஆகணும். சென்னை லோக்கல் ட்ரெயின்ல நெய் பிஸ்கட் என்றொரு பதார்த்தத்தை விற்றபடி வரும் வியாபாரிகளை உங்கள தாண்டிப்போக விட்றாதீங்க. அதுவும் சூடா சிலர் விப்பாங்க. கண்டிப்பா வாங்கி டேஸ்ட் பார்த்திடுங்க. வேற எங்கயுமே இப்படியொரு சுவைல கிடைக்காது. ஸ்ட்ராங்லி ரெக்கமெண்டட்.

ரயில் சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி விடியத் துவங்கும் சிவந்த கீழ்வானம் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை இந்த வார்த்தைகளில் சொல்லமுடியாமல் தவிக்கிறேன் (எஸ்.ராத்தனமா இப்படி சில வார்த்தைகள் எழுதினாத்தான் பதிவு எழுதின திருப்தியே கிடைக்குது. மன்னிச்சு). ஒருவழியா 5.30-க்கு எண்ணூர் சென்றடைந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும் தாழங்குப்பத்திற்கு ஷேர் ஆட்டோ கிடைக்காமல் ('போடாங்' என சென்னை பாஷையில் மனசுக்குள் திட்டிக்கொண்டே) பொடிநடையாகவே நடக்க ஆரம்பித்து கடற்கரையை சென்றடைந்தோம்.


தாழங்குப்பம் கப்பல்த்துறையை (Pier) கரையிலிருந்து பார்த்தபோது மரியான் தனுஷாட்டம் 'ஆத்தா' என்று பரவசப்பட்டு 'க்ளிக்க' ஆரம்பித்தோம். கொசஸ்தலை ஆறு வங்காள விரிகுடாவில் கடக்கும் கழிமுகம் என்றால் நமக்கு தெரியாதுதான். இது என்ன இடம்ன்னு புரியும்படியா சொல்லனும்ன்னா 'காக்க காக்க' திரைப்பட கிளைமேக்ஸ் ஃபைட் நடக்குமிடம் இதுதான். தரைதட்டா கடலின் ஆழத்தில் நிற்கும் கப்பலின் சரக்குகளை கரைக்கு கொண்டுசெல்ல உருவாக்கப்பட்டு தற்போது சிதிலமடைந்த எச்சமாக உள்ளது.

உடன்வந்த பசங்க ரெண்டுபேரும் டிஜிட்டல் கேமராவில் புகைப்படம் எடுக்கும்போது கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம, மன்னன் படத்தில் ஓட்டைக்கண்ணாடி அணிந்து சிரிச்சமுகமா இருக்கும் தலைவரைப்போல முகத்தை வைத்துக்கொண்டு என் மொபைலில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். கடற்கரையில் அமர்ந்தபடி சூரியோதயம் பார்ப்பது மழைநேரத்தில் சூடா பஜ்ஜி சாப்பிடறமாதிரி அலுக்கவே அலுக்காத விசயம்.

கொசஸ்தலை ஆறு ஒருபுறம், அது முழுக்க படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர்கள், அது கலக்குமிடத்தில் கடல்த்துறை, சீறீயபடி அலைகளைக்கொண்ட கடல் என புகைப்பட விரும்பிகளுக்கு ஏற்ற இடம் இந்த தாழங்குப்பம். அதுக்காக பேமிலியோட டூர் போகணும்ன்னு நெனச்சு இங்கவந்தா வேஸ்ட். சுற்றி வேறேதும் கிடையாது.



சிதிலமடைந்த அந்த தூண்களில் ஏறி பாதிக்கடந்தவரை பயமில்ல. சீறிவரும் அலைகளைக் கண்டபோதுகூட பயமில்ல. கீழமுழுக்க பாறைகளால் நிறைந்த கடல் என்றும் ரெண்டுநாள் முன்னாடிதான் ஒருத்தர் தவறிவிழுந்து தவறிட்டார் எனக்கேட்டதும் கைகள் காற்றில் டைப்படிக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடலுக்கு புறமுதுகுகாட்டி கரையை அடைந்தேன். இந்தவிசயம் தெரியாதவரைக்கும் யார்கிட்ட வேணாலும் "பயம்மா?! எனக்கா?!" என பன்ச் விட்டுக்கலாம். அவ்வ்.

சென்ட்ரலிலிருந்து ரிட்டனுக்கும் சேர்த்து எடுத்த டிக்கெட், சாப்பிட்ட டீ மற்றும் பஜ்ஜியை சேர்த்து ஒரு ஆளுக்கு சராசரியாக ரூபாய் முப்பதுக்குள் சீப் பட்ஜெட்டில் பயணம் முடிஞ்சது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவச்சுட்டு முடிஞ்சா ஒருமுறை போய் ரசிச்சுட்டு வாங்க பாஸ்.


அவ போய்ட்டா மச்சான்

கார்த்திக். அழகென்று சொல்லமுடியாத அளவுக்கு இல்லாவிட்டாலும் சுமாரான அழகு. சென்னை மாநகர் தத்தெடுத்த கோடியில் ஒருவனாய் வெகு சமீபத்தில் இணைந்தவன். சோம்பேறி பேச்சுலர். ஞாயிறன்று ரூம்ல நடந்த ஏதோவொரு களேபரத்துல தூக்கம் களைந்து... மறுபடியும் தூங்கலாமா இல்ல எந்திச்சுறலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்குறப்ப... அவன் செல் சிணுங்கி இவனை எழுப்பி உட்கார வைத்தது. எடுத்து காதோரம் வைத்தபடி ஒரு "ஹலோவை" உதிர்த்தான். எதிர்ப்புறத்தில் இரண்டொரு நிமிடம் நீடித்த மௌனம் அதன்பின் இவனை பல "ஹலோக்கள்" உதிர்க்க வைத்தது.



மௌனம் உடைந்து வெளிப்பட்டது எதிர்ப்புறம் ஓர் இனிமையான பெண் குரல். உண்மையில் பெண்குரல் கேட்டதும் இவனுக்குள் "கிக்". கார்த்திக்கை பொறுத்தவரை தன்னை யோக்கியனாக காட்டிக்கொள்ள நினைக்கும் அடிமுட்டாள். பெண்கள் எதிரில் வந்தால் பார்வையை வேறு பக்கம் திருப்பி கடந்துவிடுவான். ஆனால் கடந்தபின் கள்ளத்தனமாய் அதே பெண்களை கிட்டத்தட்ட நினைவுகளால் கற்பழித்துக் கொண்டிருப்பான். பெண்கள் விசயத்தில் தன் தாழ்வு மனப்பான்மையை மறைக்க இவனுக்கு இந்த யோக்கியன் திரை அவசியமாகப்பட்டது. இப்படிப்பட்டவனுக்கு ஒரு பெண்ணிடமிருந்து திடீரென அழைப்பு வந்ததில் அவனுக்கே ஆச்சர்யம்தான்.

ஹலோ... கார்த்திக்?

ஆமா நான் கார்த்திக் தான் பேசுறேன். சொல்லுங்க. நீங்க?

நான் ப்ரியா பேசுறேன். பெருந்துறைல ஒண்ணா வொர்க் பண்ணோமே ஞாபகம் இருக்கா?

(பழைய கம்பெனில இவனோட ப்ரியாங்கற பேர்ல நிறையப்பேர் வேலை செஞ்சதால யார்ன்னு இவனால டக்குன்னு ஞாபகப்படுத்த முடியல.)

"ஓ! சரியா ஞாபகம் இல்லையே. சொல்லுங்க. எந்த ப்ரியா?" என கார்த்திக் கேட்டு முடிப்பதற்கும் ப்ரியா அழ ஆரம்பித்ததற்கும் சரியாக இருந்தது.

அட! ஏன் அழறீங்க? முதல்ல அழறத நிறுத்துங்க. என்னாச்சு?

______

சொல்றேன்ல... முதல்ல அழாதீங்க. என்னாச்சுன்னு சொல்லுங்க. ஹலோ...

இல்ல கார்த்திக். எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. நாளைக்கு எனக்கு கல்யாணம்.

கார்த்திக் சந்தித்த முதல் இடி இது. அதுவரை இவனுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த வயலின் சத்தம் "மியூட்டானது".

கொஞ்சம் குரலை வரவழைத்துக் கொண்டு...

ஓ! வாழ்த்துகள். அப்புறம் ஏன் அழறீங்க? சந்தோசமால்ல இருக்கணும்?!

இல்ல கார்த்திக். இத எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல. நாளைக்கு எனக்கு கல்யாணம். அதுக்குள்ள உங்ககிட்ட இத சொல்லிட்டா என்கிட்ட இருக்குற பாரத்த இன்னையோட இறக்கிவச்ச மாதிரி இருக்கும்.

ம்ம்... சொல்லுங்க.

நீங்க கம்பெனில ஜாயின் பண்ண ஆரம்பத்துல இருந்தே உங்கள எனக்கு பிடிச்சிருந்தது. ஒன்னரை வருசமா நான் உங்கள லவ் பண்ணேன்.

தனக்கு காதலியே இல்லைன்னு வருத்தப்பட்ட ஒருத்தனுக்கு நாளைக்கு கல்யாணத்த வச்சிட்டு இத்தனை நாள் காதலிச்சதா ஒரு பொண்ணு சொன்னா எந்த அளவுக்கு வலிச்சிருக்கும். நம்ம ஆளுக்கு இது இரண்டாவது இடி. யார்றா இவ லூசு? இத ஏன் முதல்லையே சொல்லலன்னு அவனுக்குள் ப்ரியாவைப்பற்றி கோபமாய் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது.

நிஜமாவே இப்ப கார்த்திக்குக்கு ஆக்ஸிசன் தேவைப்பட்டது.
மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தான்.

என்ன சொல்றீங்க? நாளைக்கு உங்களுக்கு கல்யாணம். இப்ப சொல்றீங்க?

ம்ம்... இப்ப கூட சொல்லிருக்க மாட்டேன். ஆனா மனசு உறுத்தலா இருந்தது. இப்ப சொல்லாட்டி வேற எப்பவுமே சொல்லமுடியாது. மனசு கேக்கல. அதான்.

____

என்னால முடியலைங்க. விம்மலில் தொடங்கி உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள் ப்ரியா.

இரண்டு இடிகள் சந்தித்த காரணத்தால் இதுவரை சமாதானம் செஞ்ச நம்ம ஆளுக்கு கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்திருந்தது. கார்த்திக் அழுததற்கு முழுக்க முழுக்க "வட போச்சே" காரணம்தான். யாருக்கு யார் சமாதானம் செய்றதுன்னு அவங்களுக்குள்ள குழப்பமே வரல. பாரபட்சமே இல்லாம இரண்டு பக்கமும் அமைதி... அழுகை... அமைதி... என சுழற்சிமுறை நடந்துகொண்டிருந்தது.

முதலிலேயே காதலை சொல்லாமல் விட்டதற்காக ப்ரியாவும்... நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு இப்ப சொல்றாளேன்னு கார்த்திக்கும் ஜீரணிக்க ஏதேனும் வழி உண்டா எனத்தேடி வேறு வழியில்லாமால் கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.

லைட் ப்ளூ கலர் சர்ட்டும் கருப்பு பேன்ட்டுமாய் இவன் கம்பெனியில் நுழைந்தது முதல்... கம்பெனிய விட்டு போனது வரைக்கும் சொல்ல நிறைய சம்பவங்கள் இருந்தது ப்ரியாவிடம்.

சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லிவிட்டு பெரும்பாரம் இறக்கிய நிம்மதியில் கண் துடைத்தபடி அழைப்பை துண்டித்தாள் ப்ரியா. அவள் இறக்கிவைத்த சுமையை அவளுக்காய் இன்றும் சுமந்து கொண்டிருக்கிறான் கார்த்திக்.

தன்னை ஒரு பொண்ணு இப்படி விரட்டி விரட்டி லவ் பண்ணியிருக்கான்னு இதோ இப்ப நினச்சாகூட கார்த்திக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கு. இந்த சம்பவம் நடந்து முழுசா ரெண்டு வருசமாச்சு. ப்ரியாவோட குழந்தைக்கு முதல் பிறந்தநாளும் முடிஞ்சுருச்சு. நம்ம ஆளுதான் இன்னும் ப்ரியான்னு யார் அறிமுகமானாலும் சோகப்பார்வை வீசிக்கொண்டும்... ஃபீலிங்க்ஸ் பாட்ட மொபைல்ல கதறவிட்டு திரியுறார். உலகத்துலயே ஒரே ஒரு ஃபோன் கால்ல ஆரம்பிச்சு... முடிஞ்சு... நினைவுகளில் தொடர்ற காதல்கதை நம்ம கார்த்திக் உடையதாகத்தான் இருக்கும்.

இதெல்லாம் கூட பரவால்ல. ப்ரியான்னு பேர் இருக்கிற எல்லாரும் அழகென்றும், 'Priya'ங்கா சோப்ரா கூட அந்த பேராலதான் உலக அழகியா ஆனாங்கன்னு சண்டை வேற. டேய் பிரியங்கா வேற ப்ரியா வேறன்னு சொன்ன ஒருத்தன்கூட ரெண்டுமாசமா, சரக்கு ட்ரீட் தர்றேன்னு சொல்லி ஏமாத்துனவன முறைக்கிறமாதிரி கோபமா லுக்கு விட்டுகிட்டு திரிஞ்சான்.



சரக்குன்னு சொல்லவும்தான் ஞாபகம் வருது. அப்பப்ப பீர் பாட்டில கைல புடிச்சிட்டு அலையுறார் நம்ம திருவாளர் கார்த்திக். இவன்கூட தண்ணியடிச்ச எல்லாருக்கும் இவனோட லிமிட் தெரியும். ஆமா. சரியா "அவ போய்ட்டா மச்சான்"னு ஆரம்பிச்சாலே அத்தோட பீர் ஊத்துறத நிறுத்திருவாங்க. பீ கேர்புல். எங்கயாவது "அவ போய்ட்டா மச்சான்..."னு யாராவது எதிர்பட்டா அது கார்த்திக்காகவும் இருக்கலாம்.

Thursday, June 6, 2013

இது அதே மழையில்லைதான்!



ஆதிமனிதனிலிருந்து வெகுதூரம்
வந்துவிட்ட என் பயணத்தில்...
கண்முன்னே எதற்காக பார்த்தேன்?!
மழைத்துளிகள் பூண்டு
கைவிரித்தபடி நின்ற நிர்வாண மரத்தை!
என்றாகிலும் ஒருநாள் இதைப்போலவே
கைகளில் ஏந்தவேண்டும் மழைத்துளிகளை...

இது அதே மழையில்லைதான்.
ஆனால் உன் முத்த கதகதப்பு அப்படியே இருக்கிறது.

யாரும் பார்க்காதபோது
சன்னல் கம்பிகளில் வழிந்தோடும்
மழைத்துளி உடைத்ததில்
கைகளில் ஏறிக்கொள்கிறது
ஈரமும் கொஞ்சமென் பால்யமும்...

மண்வாசம் கிளப்பிவிட்டுச்செல்லும்
முதல் மழைத்துளிபோல் உன்னை
எனக்குள் நிறைத்துவிட்டுச் செல்கிறது
ஒவ்வொரு மழையும்...

மழையில் பிறந்து மழையில் அழியும்
நீர்க்குமிழி
உன்னில் தொடங்கி உன்னில் முடியும்
என் காதல்...

என் தனிமை பற்றி உனக்கோர் உதாரணம் சொல்லவா?
தனிமையைத் துளிகளாக்கி பொழிய வைத்தால்
தோற்றுப்போகும் எத்தனை பெரிய மழையும்.

மழை! மழையாகவே இருக்க
ஒருபோதும் காத்திருப்பதில்லை.
யோசித்துப்பார்த்தால் கடலின்
பூமிப்பிரவேசம் மழை!

ஆழிசூழ் உலகழியும் வேளைவரை நானிருந்தால்...
வேறென்ன கேட்பேன்?!
உன்னோடு உன்னோடே
கொஞ்சம் மழையும் கோப்பை நிறைய தேநீரும்.

Friday, April 26, 2013

உற்றுக்கேட்ட விசும்பல்

தென்னகங்களில் பரவிவரும் நிலச்சீட்டு முறைபற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். மாதம் மாதம் கொஞ்சம் பணத்த கட்டி வந்தா முடிவில நம்ம பேர்ல சொத்து ஒன்னு இருக்குமேன்னு பணம் கட்டிவந்தேன். சீட்டும் முடிந்து பத்திரப்பதிவிற்காக அழைத்திருந்தார்கள். ஆபிஸ்ல வழக்கம்போல சில முன்னேற்பாடுகள முடிச்சிட்டு லீவ் வாங்கி ஊருக்கு கிளம்பியாச்சு.

பத்திரப்பதிவு அலுவலகம். வாசலுக்கும் அலுவலகத்திற்கும் கையில் மஞ்சள் பைகளை வைத்துக் கொண்டு அலையும் ஏஜென்ட்கள், பதிவிற்காக வந்து வெகுநேரம் காத்திருந்த களைப்பில் எதிரே உள்ள டீக்கடையில் இந்தியப் பொருளாதாரத்தை விவாதித்துவிட்டு சில்லறை தேடியவர்கள், வணக்கம் வைத்துக் கொண்டே ஒரு கையில் அசால்ட்டாக பைக்கில் வலம்வந்த அரசு அதிகாரிகள் என அதே கிளிஷே காட்சிகள்.

என்னுடன் சேர்த்து பணம் கட்டிய முப்பத்திச்சொச்ச பேரும் சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வீடு திரும்ப காத்திருந்தாங்க. இந்த இடைவெளியில் நீ இன்னார் மகன்தான... பேரன்தானன்னு அடையாளம் கண்டுபிடித்து பேசிய சில உறவுமுறைகள். இப்படிப் போய்கொண்டிருந்த நேரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தபடி இரண்டு வெள்ளைவேட்டி பல்சர்களைத் தொடர்ந்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. பல்சரில் இருந்து இறங்கி இருவரும் கைத்தாங்கலாக ஆட்டோவிலிருந்து ஒரு வயதான மூதாட்டியை இறக்கினர். பார்க்க அந்த பாட்டிக்கு எப்படியும் 70 வயசு இருக்கும். பழுப்பேறிய எட்டு முழ சேலைய உடம்புமுழுக்க சுத்திவிட்ருந்தாங்க. இவங்களுக்காகவே காத்திருந்த இரண்டுபேர் வெள்ளை வேட்டிகளிடம் தங்களது க்ளோசப் புன்னகையைக்காட்டி டீக்கடைக்குத் தள்ளிச்சென்றனர்.

அதன்பின்... வாசலுக்கும் அலுவலகத்துக்கு உள்ளேயுமாய் ஒரு வெள்ளைவேட்டி மனிதர் நடந்துகொண்டிருக்க, இன்னொருவர் டீ கிளாஸோடு 'இந்தா குடி. எவ்வளவு நேரமாவுமோ தெரில. பட்டினியா கெடந்து தொலையாத' என்றபடி பாட்டிய நெருங்கினார். பாட்டி எந்த சத்தமும் இல்லாம முந்தானையை உருவி கையில் பிடித்தபடி டீ க்ளாஸை உப் உப் என ஊதிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தார்.

இதற்குள்ளாக எங்களோட ரியல் எஸ்டேட் ஏஜென்ட் பக்கத்துல வந்து 'தம்பி...  பெரியவுக (ரிஜிஸ்ட்ரார்) வர நேரமாட்டு இருக்கு. எங்கனயோ விசிட் போயிருக்காராம்' என காதில் ஓதினார். அதாவது லேட்டாகும் வீட்டுக்கு சீக்கிரம்போக ஆசைப்படாம உட்காருன்னு சொல்லாம சொல்லிட்டுப்போனார். கொஞ்சம் ஏமாற்றம்.

ஊருக்கு கிளம்பிவரும் அவசரத்தில் சார்ஜ் போடாததால் மொபைல் ஏற்கனவே பேட்டரி-லோ என பல்லிளித்திருந்தது. பொழுதைப் போக்க வேற வழி இல்லாததால அக்கம்பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிருந்தேன். பக்கத்துல உட்காந்திருந்த பெண்கள் சமீபத்துல தற்கொலை பண்ணியவர் ஒருத்தர மறுபடியும் உயிர்கொடுத்து நடமாடவச்சு சரியா அப்ப வாயத்தொறந்து விசத்தை ஊற்றிக்கொண்டிருந்தனர். கவனிக்க முடியாததால் என் கவனம் அந்த பாட்டியின் மேல் விழுந்தது.

அந்த பாட்டி வந்ததிலிருந்து யாருகிட்டயும் பேச்சு கொடுக்கல. அப்பப்ப அந்த வெள்ளை வேட்டிகள் வந்து ஏதோ சொல்வதும் போவதுமாக இருந்தனர். அதற்கும் அந்த அம்மா எந்த சலனமும் காட்டவில்லை. வெள்ளைவேட்டிகள் இருவரும் அந்த அம்மாவின் மகன்கள் என்றும், இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே விசைத்தறி போட்டு தொழில் செய்வதாகவும் சொன்னார்கள். சின்னவயசுலயே கணவனை இழந்தபின்னும் பூர்வீக வயல்வெளிகளை குத்தகைக்கு விட்டும், சின்ன அளவில சொந்தமா விவசாயம் பண்ணியும் எந்தக் குறையுமில்லாம வளர்த்திருக்காங்க. குழந்தைகள கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பிரயோஜனம்?

இப்ப அவங்க கூட்டி வந்திருக்கறதே எல்லா சொத்தையும் வித்து சரிபாதியா பிரிக்கத்தானாம். அந்த அம்மா கடைசிவரைக்கும் இது பூர்வீக சொத்து. விற்க வேண்டாம் ஆளுக்கு சரிபாதியா பிரிச்சுக்கோங்கன்னு சொல்லிருக்காங்க. தொழில் பண்றது வேற இடத்துல, அதனால இதெல்லாம் கவனிக்க முடியாது அப்புறம் சொத்தையும் அந்த அம்மா உயிரோட இருக்குறப்பவே பிரிக்கனும்ன்னு பசங்க ஐடியா. அந்த பாட்டியோட பேச்சு எடுபடல. (தற்கொலை டாபிக் முடிந்தபின் பாட்டி பற்றி அந்த பெண்கள் பேசியதை கவனித்ததிலிருந்து).

பாட்டி அப்பப்ப கீழே தரையிலோ அல்லது விட்டத்திலோ பார்வையை நிலைகுத்தி செலுத்திக்கொண்டிருந்தார். ஒரே ஒருமுறை மட்டும் 'ராசு...' என சின்ன மகனை அழைத்து டீ வரவழைத்தார். சொத்து கைமாறுவதில் அந்த அம்மாவுக்கு விருப்பமில்ல. அதனால இங்க நடக்குற... சுத்தியிருக்குற எதையும் அந்த அம்மா பொருட்படுத்தவே இல்ல. பலியாகப்போகும் ஆட்டிற்கு கொடுக்கப்படும் கடைசிநேர மரியாதைகள் மகன்களிடமிருந்து. பத்திரப்பதிவு முடிஞ்சு யார் வீட்டுக்கு பாட்டிய கூட்டிட்டு போறதுன்னு காதுபட பேசினார்கள். இந்த வாரம் சின்னமகன் வீடு என முடிவானது.

ஒருவழியா 12 மணியளவில் விசிட் முடிந்து ரிஜிஸ்ட்ரார் திரும்பினார். அவர் வந்ததுமே அலுவலகம் பரபரப்பானது. எங்கிருந்தோ ஏஜென்ட்கள் திபுதிபுவென வாசலுக்கு விரைந்து ஓடினார்கள். வெள்ளை வேட்டி மனிதர்கள் செல்வாக்கானவங்க போல. முதல் பதிவா அவங்கள வரச்சொன்னாங்க. ரிஜிஸ்ட்ரார் செக் செய்து முடித்து அந்த அம்மாவோட ரேகை வாங்குவதற்காக பத்திரங்கள் வெளியே வந்தது. கிட்டத்தட்ட பாட்டியின் விரலை ஸ்டாம்ப் பேடில் தோய்த்து பத்திரத்தில் அழுத்தினார்கள். எல்லாம் முடிந்தது. தலைமுறை தலைமுறையாக வந்த சொத்து சிலநிமிடங்களில் கைமாறிப்போனது. அதுவரை எந்த சலனமும் இல்லாமல் இருந்த அந்த பாட்டியின் உடல் குலுங்க ஆரம்பித்தது. விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தார்.

மகன்கள் எதுவும் பேசவில்லை. புடவைத்தலைப்பால் முகத்தை மறைத்தபடி அழுதுகொண்டிருந்தார் பாட்டி. மகன்கள் மட்டுமில்லாம சுற்றி இருந்த எல்லாரும் அமைதியா வேடிக்கை (மட்டுமே) பார்க்கமுடிந்தது. அந்த அம்மாவ சமாதானப்படுத்த யாருக்குமே தெம்பில்ல. அழுகை கொஞ்சம் ஓய்ந்தது. ஒருத்தர் கைகளையும் இன்னொருத்தர் கால் பக்கமும் பிடித்தவாறு ஏற்றி அமரவைக்க... அந்த பாட்டியைப்போலவே குலுங்கியபடி புறப்பட்டது ஆட்டோ. சிலநிமிடங்களுக்கு அங்க வேற எந்த சத்தமும் கேட்கல.

"எல்லாம் சீட்ட எடுத்துட்டு வெரசா வரிசைல வாங்க. ஐயா கூப்பிடுதாக..." என அமைதியை ஏஜென்ட் குரல் உடைத்தது. முப்பத்திச்சொச்ச பேரும் வாசல்நோக்கி விரைந்தோம். வரிசையில் நின்ற என் மனதில் மகுடேசுவரனின் இந்தக்கவிதை ஓட ஆரம்பித்தது.

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை


- மகுடேசுவரன்

Tuesday, March 12, 2013

பாடும் தேவதை

March 12; பாடும் தேவதை ஸ்ரேயா கோஷல் பிறந்த நாள். என்ன எழுதுவதெனத் தெரியல. வழக்கம்போல அவங்கள Youtube-ல் பாடவிட்டுட்டு இன்னொரு டேப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.


முதல்லலாம் "டோலா ரே டோலா" பாட்டு ஓடினா ஐஸ்வர்யா ராய் & மாதிரி தீக்ஷித்தோட "அந்த" இடுப்பு ஸ்டெப் தான் ஞாபகம் வரும். ஆனா இப்பல்லாம் ஸ்ரேயா கோஷல் தான் ஞாபகம் வர்றாங்க. திரையுலகத்துக்கு அறிமுகமான பாடலாச்சே. முதல் படத்திற்கே தேசிய விருது. மொத்தம் நான்கு முறை தேசிய விருதுகள் என சாதனைகளை அடுக்க இந்தப்பதிவொன்றும் விக்கிப்பீடியா பதிவல்ல. :-)

தமிழ்ல ஆல்பம் படத்தின் "செல்லமாய் செல்லம் என்பாயடா"ன்னு அவங்க பாடி அறிமுகம் ஆனாலும் ஆனாங்க... அன்னைல இருந்து பல தமிழ்க்குடும்பங்களுக்கு செல்லம் ஆகிட்டாங்க.

"When in Rome, do as the Romans do" - என்ற பழமொழிக்கு மிகச்சரியான பொருத்தம் ஸ்ரேயா கோஷல். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியைத் தாய்மொழிபோல் உச்சரிப்புப் பிழையின்றி பாடும் திறமை ஸ்ரேயாவிற்கு உண்டு. வெயிட் வெயிட். சண்டைக்கு வராதீங்க. ஆரம்பத்துல உச்சரிப்புப் பிழையோட தமிழ்ல சில பாடல்கள் பாடிருக்காங்கதான். மழலையின் பிழைபோல அதுவும் இனிமையாகத்தான் எனக்குப்படுகின்றது. தமிழ்ல மட்டும்தான் 'ழ'கர உச்சரிப்பு உண்டு. வேற எந்த மொழியிலும் இந்த உச்சரிப்பு கிடையாதுன்னு கேள்விப்பட்ருக்கேன். பின்ன உச்சரிப்புப் பிழை இருக்காத்தானே செய்யும்?! அவ்வ்.

ஒரு தனியார் நகைக்கடை விளம்பரத்தில் நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டார். யெஸ் அப்கோர்ஸ் தப்புதான். பின்ன வெறும் 40 நொடிகள்தான அந்த விளம்பரம் ஓடும். ஹூம். விளம்பர இயக்குனருக்கு என் நன்றிகள். "உந்தன் குரலினில் மயங்கினேன் மயங்கினேன் என் சுவாசக்காற்றே"... எனப்பொருத்தமான வரிகள். எந்த இசைக்கருவியும் பயன்படுத்தப்படாமல் ஸ்ரேயாவின் குரல் மட்டுமே மயக்கும் அந்த விளம்பரத்தை ரசிக்காமல் விமர்சிக்க எப்படித்தான் மனசு வருதோ?!


அப்புறம் இன்னொரு விசயம்... ஸ்ரேயா ரசிகர்கள் அனைவரும் எதிர்கொள்ற கேள்வி இது. "ஸ்ரேயாவை இவ்வளவு புகழ்ரீங்களே அப்ப மத்த பாடகிங்க எல்லாரும் நல்லா பாடியதே கிடையாதா? இனிமையான குரல் வேற யாருக்குமே கிடையாதா?". ஏன் பாஸ் காதலியை வர்ணிக்கறதுக்கும் தாயை மெச்சுவதற்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு? ஸ்ரேயா புடிக்கும்ன்னு சொல்றதால சின்னக்குயில் சித்ராம்மா, ஜானகி அம்மா, சொர்ணலதா அவங்கள புடிக்காதுன்னு அர்த்தம் ஆகிடுமா என்ன? ஸ்ரேயா - தேவதை; மத்தவங்க எல்லாரும் தாயன்புக்குச் சமானமானவங்க. என்னளவில் அவ்வளவுதான் வித்தியாசம்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஜூன்-26, 2010 "ஸ்ரேயா கோஷல் டே" எனக்கொண்டாடப்பட்டது. எங்களுக்கு வருடம் முழுவதுமே ஸ்ரேயா கோஷல் டே தான். :-)

ஸ்ரேயாவின் இனிமையான குரலுக்கு மெலடி மட்டும்தான் பொருந்தும் என்ற விமர்சனத்தை "சிக்னி சமேலி" பாட்டில் தகர்த்தெறிந்திருப்பார். போதாக்குறைக்கு கத்ரீனா கைப் பேயாட்டம் வேறு. செம்ம ஹாட் மச்சி.

கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் கால்-ஷீட் பிரச்சினையின்றி அயராது பணிபுரிகிறார்.

ஸ்ரேயா கோஷல் - உன் பேரைச் சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம். :-)))

லிங்க் ப்ளீஸ்ன்னு வந்து நிக்காதீங்க. :P இதோ ->

"டோலா ரே டோலா" பாடல் -  https://www.youtube.com/watch?v=Jbn39j-xa-k

ஐந்து மொழிகளில் விளம்பரம் : "உந்தன் குரலினில் மயங்கினேன் மயங்கினேன் என் சுவாசக்காற்றே"... - https://www.youtube.com/watch?v=xKs5yR8hw-s

சிக்னி சமேலி - https://www.youtube.com/watch?v=Gg7lcTCX5EY

கருப்பு

Tuesday, March 5, 2013

புத்தக வாசிப்பு :



ஏன் புத்தகம் வாசிக்கனும்?
புத்தகம் படிக்கறதால என்ன நன்மை?

சில காலத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்கும் இந்த கேள்விகள்லாம் இருந்தது. வாசிப்பு பழக்கம் சமீபத்துலதான் எனக்கு வந்தது. பதிலும் கிடைச்சது. 



புத்தக வாசிப்பின் நன்மைகள்:

"பச்சை கலர் துப்பட்டா காத்துல பறந்துபோய் அவனது முகத்தில் விழுந்தது. இடது கையால் அதை எடுக்கும்போது அவனது வாட்ச் சூரிய ஒளியில் பட்டு பிரகாசித்தது"

மேற்சொன்ன இந்த வாக்கியத்த படிக்கறப்ப வாலி படத்துல சிம்ரன் அஜீத்த ஊட்டி சீன்ல கற்பனை பண்ணமாதிரி பச்சை கலர் துப்பட்டா பறக்குறமாதிரியும்... முகத்தில விழறதுமாதிரியும் கற்பனை பண்ணிருப்பீங்களே. இதாங்க புத்தக வாசிப்பின் முதல் நன்மை. புரியலையா? ஆமாங்க. இப்படி உங்களோட கற்பனை பண்ற சக்திய வளர்க்குறதுதான் புத்தக வாசிப்பின் முழுமுதல் நன்மையே. பொதுவா அமெரிக்கர்கள் டெலிவிசன அதான் TV-ய "இடியட் பாக்ஸ்" அப்படின்னு தான் சொல்வாங்க. ஏன்னா மேற்சொன்ன அதேகாட்சிய அது விஷுவல்-ல காமிச்சுரும். உங்கள கற்பனையே பண்ணவிடாது. அதனாலதான்.

புத்தக வாசிப்பு உங்கள இன்னொரு காலத்துக்கு... ஏன் இன்னொரு உலகத்துக்கே கொண்டுபோயிரும்... அதுவும் பைசா செலவில்லாம. பொன்னியின் செல்வன் படிச்சவங்களுக்கு இது நல்லாவே தெரியும். கிட்டத்தட்ட அந்த புக் படிக்குறப்ப ராஜ ராஜ சோழன் காலத்துக்கே போய் அவங்களோட இருந்துட்டுவந்த அனுபவம் இருக்கும். ஹாரி பாட்டர் தான் படிச்சேன்னு சொல்றீங்களா? உங்களுக்கும் அதேதான். ஹாரி பாட்டர் பக்கத்துல நின்னு சாகச காட்சிகள் பார்த்திருப்பீங்களே!


ஒரு புத்தகம் படிக்கறீங்கன்னு வைங்க. உதாரணத்துக்கு கதை படிக்கறதா வச்சுக்கலாம். கதைல வர்ற எல்லா கதாபாத்திரமும் உங்க கற்பனைல ஓடும். எல்லா கதாபாத்திரங்களோட உணர்வும் உங்களால புரிஞ்சுக்க முடியும். நிஜ வாழ்க்கைல இதேமாதிரி சம்பவங்கள் நடக்குறப்ப உங்களால மற்றவர்கள் உணர்வ எளிதில் புரிஞ்சுக்க இந்த வாசிப்பனுபவம் உதவும்ன்னு ஆய்வு சொல்லுது.

எகிப்து அப்படின்னதும் எப்படி பிரமிட் மற்றும் மம்மி ஞாபகம் வருதோ அதமாதிரிதான் புத்தக வாசிப்பு ஒரு நாட்டோட கலாச்சாரத்த கண்முன்னாடி கொண்டுவருது. யோசிச்சுப்பாருங்க உட்கார்ந்த இடத்துல இருந்தே உலகத்தையே சுற்றி வரமுடியும். எல்லா நாட்டு மக்களோட கலாச்சாரத்தையும் தெரிஞ்சுக்க முடியும்.

செஸ் அதிகம் விளையாடுன்னா "Decision Making Power" அதிகமாகும்ன்னு சொல்லுவாங்க. அதுமாதிரிதான் வாசிப்பு உங்களுக்கு பல்வேறு விசயங்களையும் அறிவையும் ஊட்டும்.

ரயில் பயணத்தில் நண்பர்கள் கிடைப்பதுபோன்றே பலரின் தனிமைக்கு சிறந்த நண்பன் புத்தக வாசிப்பு. உதாரணத்துக்கு என்னையே சொல்லலாம். இடைப்பட்ட ஒருவருடம் நான் மட்டும் தனியா இருக்க வேண்டியிருந்தது. அப்ப புத்தகங்கள்தான் எனக்கு சிறந்த துணை.

இதற்கு முன்னர் எழுத்தைப்பற்றியும் வாசிப்பைப் பற்றியும் எழுதிய குறும்பதிவு : Facebook - Post


Monday, March 4, 2013

ஜன்னல்



சமயத்தில்
என் ஜன்னல்
பால்யத்தின் நுழைவு வாயில்

பயணத்தில் மரங்களை
பின்நோக்கி ஓடவைத்தது...

மழைப்பொழுதுகளில் கம்பிகள் தாங்கிய
துளிகள் உடைத்து கழிந்தது பால்யம்...

திருவிழா தொடங்கிவிட்டால்
பிடியைத் தளர்த்தாது
பொழுதுகள் கழியும் வேடிக்கையில்...

என் விரல்பிடித்து
எப்போதும் பிரமிப்புகளை
காட்டியிருக்கிறது
ஜன்னல்

அது அப்படியேதான்
இருக்கிறது
நாம்தான் அதனருகே அமர்வதில்லை

இப்படியே இருந்திருக்கலாம்
எனக்கும் ஜன்னலுக்குமான
உறவு...

என்றோ ஒருநாள் இரவின் பிடியில்
ஜன்னல் கம்பிகள் பிடித்து
தேம்பியழுதது மட்டும்
நடந்திருக்காவிட்டால்...

ஊடல் பொழுது



தேநீர்க் கோப்பைகள் உருண்டோடும்
முகம் காட்ட மாட்டாய்
ஜன்னல் வழி கள்ளப்பார்வை வழியனுப்பும்
மாலை மேஜையில் காபி தனித்திருக்கும்
அழைத்தால் மறந்தும் திரும்பமட்டாய்
உன் ஊடல் பொழுதுகளில்...

ஒரு முத்தம்
ஒரு வெற்று குறுஞ்செய்தி
கொஞ்சம் சின்னதாய் மழைத்தூறல்

இதிலொன்று போதும்
ஊடல் முடித்து உன்னை வசப்படுத்த

எதுவுமில்லையா? போ போ...

நானும் முகம் திருப்பிக்கொள்வேன்
பின் நீ கெஞ்சவேண்டியிருக்கும்.