Friday, November 14, 2014

சுமித்ரா

நம் வாழ்வின் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போகும் எந்த புத்தகமும் அத்தனை சீக்கிரத்தில் நினைவிலிருந்து விலகிவிடுவதில்லை. இந்த நாவலானது என் வாழ்வில் நான் கடந்துவந்த பெண்களின் பரிணாமங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதாநாயகி சுமித்ரா, தனது 38வது வயதில் மரித்துக்கிடக்கிறாள். ஒரு பெண் தனது 35வது வயதில் பூரண அழகியலோடு தோன்றுகிறாள் என ஜெயமோகன் ஒருமுறை சொன்னதுபோல கற்பனையில் காட்சியளிக்கிறாள் சுமித்ரா. காலைவரை நடமாடிய ஒருவர் இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்ற இந்த மரணம் தந்த கசப்போடு சிறுகச்சிறுக வீட்டிற்குள் கூடுகிறார்கள்.  அவர்கள் நினைவின் வாயிலாக யார் இந்த சுமித்ரா என நாமறிய "கல்பட்டா" நாராயணன் சொன்னதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கே.வி.ஷைலஜா. வாழ்வின் அத்தனை காலகட்டத்திலும் கண்ட, ரகசியமடங்கிய, தனித்துவமான பெண்களின் கார்பன் காப்பி வடிவம்தான் சுமித்ரா நாவல்

"மரண வீடு பிரமாண்டமானதொரு பின்புலம். மரண வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின் புன்னகை மேலும் மர்மமாக பரவி வருவதை தெளிவாகப் பார்க்கலாம்".

மலையாளத்தில் நாவலின் பெயர் "இதர மாத்ரம்" (அவ்வளவுதான்). அவ்வளவுதான் இனி அவள் வரப்போவதில்லை. அவளோடு பழகிய நினைவுகளை, பனி புல்மீது படர்வதைப்போல அசைபோடுகிறார்கள் கதைமாந்தர்கள்.



திருமணமாகி எட்டு வருடங்களாகியும் குழந்தையில்லாத கந்தம்மா அத்தை, எனக்கு முழுப்பரிட்சை லீவ் விட்டதும், தனது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றுவிடுவாள். தாய்மை என்பது கருவிலிருந்தே பெண்களுக்கு வந்த குணம் என்பது உண்மை என்பதுபோல என்னைக் குழந்தையாக்கி கவனிப்பாள். மடியில் கால்களைக்கிடத்தி தொட்டதுகூட தெரியாதவண்ணம் மிருதுவாய் நகம் வெட்டுவாள். மளிகைக்கடையிலிருந்து திரையரங்குவரை செல்லும் வழியெங்கும், அண்ணன் பையன் லீவ்க்கு ஊருக்கு வந்திருக்கான் என என் தலைகோதியபடியே, எதிரே வருபவர்க்கெல்லாம் அறிமுகப்படுத்துவாள். லீவ் முடிந்து நான் திரும்பும்போது மளிகைக்கடை பில் தாறுமாறாய் எகிறும். பின் இரண்டுநாட்கள் சொல்லிவைத்தாற்போல் அத்தைக்கு காய்ச்சல் என மாமாவின்மூலம் தகவல் வரும். பிற்காலத்தில் குடும்பத்தகராற்றின் காரணமாக, வீடுமாறி வந்துவிட்டபின், பன்னிரண்டு வருடங்கள் பேச்சே இல்லை. அவளுக்கு அதன்பின் ஒரு பெண்குழந்தை பிறந்தும்விட்டது. சமீபத்தில் சொந்த ஊர்த் திருவிழாவிற்கு சென்றபோது என்னைக்கவனித்து சிறுபுன்னகையோடு அருகில்வந்து "நல்லாருக்கியாடா!" என அவள் தலைகோதியபோது பதின்மத்தின் அதே ஸ்பரிசம். அவள் கண்ணுக்கு நான் அதே சிறுவனாகத் தெரிந்திருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். இதேபோன்ற ஒரு கதைதான் புருஷோத்தமனுக்கும் சுமித்ராவிற்கும் இடையே. தந்தையின் மருத்துவத்திற்காக சுமித்ராவிடம் விட்டுச் செல்லப்படும் சிறுவன் புருஷை, குழந்தைபோல் கவனித்து அரவணைக்கிறாள். அவனுக்குப் பிடித்ததை சமைத்துக்கொடுக்கிறாள். முதலில் ஒட்ட மறுக்கும் அவன், சிகிச்சை முடிந்து இத்தனை சீக்கிரம் தன் பெற்றோர் வந்திருக்கத்தேவையில்லை என எண்ணுமளவிற்கு , அவளின் தூய அன்பிற்கு குழந்தையாகிப்போகிறான். அவள் சமையலின் ருசி காலத்திற்கும் தன் நாக்கில் தங்கிவிட்டது. கல்லூரிக்குப் போனபின்னும்... தன் காதலியைப்பற்றி முதல் ஆளாக இவளிடம் சொல்வதுவரை அதே குழந்தையாக வளர்கிறான் சுமித்ராவிடம்.

ரகசியங்கள் பகிர்வதும், பகிரப்பட்ட ரகசியம் பத்திரமாய் இருப்பதும் நேர்ந்தால் பெண்களுக்கிடையே அன்னோன்யம் எளிதில் வந்துவிடும்.  சுமித்ராவின் பள்ளி மற்றும் கல்லூரிக்கால தோழிகள் கீதாவும், சுபைதாவும். மூவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ரகசியமும், பகிரும் கடிதங்களும் அத்தனை பொறாமையை நம்மில் ஏற்படுத்துகிறது. அந்த ரகசியங்களின்வழி தங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்கள் அனைவரும் வாழ்வுநெடுக தங்களுக்கென ரகசியம் ஒன்றை சுமந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

ஒருமுறை அரைநிர்வாணமாக சுமித்ராவைப் பார்த்துவிட்ட மாமன்மகன் அப்பு, பயணம் மட்டுமே தன்னை முழுமையாக்குகிறது என உணரும் தாசன், மகன் வீட்டைப்பிரிந்து தனித்து வாழும் கௌடர், பணியாள் கருப்பி, மொத்த வயநாட்டின் ஆண்களையும் வசப்படுத்தியிருக்கும் மாதவி, எத்தனையோ முறை பேசுவதற்காய் மனதில் ஒத்திகை பார்த்து ஒருமுறைகூட பேசாமல் போன கௌண்டர்,  மழைக்காலத்தில் மட்டும் தவணைமுறைக்கு வயநாட்டில் வெண்கலப் பாத்திரங்கள் விற்றுச்செல்லும் பொதுவாள், தோழிகள், தனது மூத்தமகள் அனுசுயா என ஒவ்வொருவருக்கும் சுமித்ராவைப்பற்றி யோசிக்க ஒவ்வொருமாதிரியாக கதையிருக்கிறது.

அத்தை, அம்மா, அக்கா, தோழி, காதலி, மனைவி, என நாம் பழகிய அத்தனை கதாபாத்திரங்களின் சாயலையும் தன்னில் நிறைத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் வலம்வருகிறாள் சுமித்ரா. உங்களுக்கும்கூட ஏதாவதொரு காட்சியில் அறிமுகமானவளாய் இருப்பாள் இந்த சுமித்ரா. பழங்கலத்தை தனது அதிகாரக் கொட்டாரமாக வலம்வருகிறாள். தோழி வரும்போது அது அவர்கள் ரகசியம் பகிரும் அவுட் அவுஸ் ஆகிறது. கணவனின் அக்காமகள் வந்து அதை ஆக்கிரமிக்கும் தருணங்களில் சுமித்ராவிற்குள் ஒரு பாதுகாப்பின்மையும், தனது அதிகாரமிடத்தை இழந்த வெறுமையும் வந்துபோகிறது.

வயநாட்டின் காப்பிச்செடி வாசமும், பச்சை நிறமும், எப்போதும் கசியும் ஈரமும் நாவல் படித்து முடித்தபின்னும் பலகாலம் நம்மோடு படியும். "கல்பட்டா" நாராயணன் ஒரு கவிஞர் என்பதால் உரைநடையில் அத்தனை கவித்துவம். அப்படியொரு காட்சிப்படுத்தல். ஜீவன் மாறாமல் படைப்பை மொழிபெயர்ப்பது அத்தனை சுலபமானதல்ல. ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பை பாராட்ட வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம் "ஷைலஜாவின் நாவலைதான் நாராயணன் கொஞ்சகாலம் முன்பாக எழுதுவிட்டார்". சிதம்பர நினைவுகள் போன்று இதுவும் ஒரு மொழிபெயர்ப்பென்று நம்புவது மிகக்கடினமாய் இருக்கிறது.

தங்கள் மொழியின் சிறந்த படைப்புகளை நேர்த்தியான திரைப்படமாக்கி கொண்டாடுவதில் மலையாளிகள் பாராட்டுக்குரியவர்கள். பால்யகால சகி போன்று இதுவும் திரைப்படமாகியிருக்கிறதாம். நிச்சயமாக விரைவில் பார்த்துவிடவேண்டும்.

சுமித்ராவின் உடல் எரியூட்டப்படுவதோடு நாவல் முடிகிறது. புத்தகத்தை மூடும் கணத்தில், மனமின்றியும், மரணத்தை எப்படி அணுகவது எனத்தெரியாமலும் மெல்ல மெல்ல களையும் வயநாட்டு மனிதர்களைப்போல நாமும் வெளியேறுவோம். 

"உணர்ச்சி மிகுதியில் அழும் பெண் முகங்கள் வழியாகச் செல்லும் தீர்த்த யாத்திரைதான் வாழ்க்கை".

Tuesday, January 28, 2014

சிதம்பர நினைவுகள்

ஆற்றில் விழும் அரச இலையை தன்னோடு அடித்துச் செல்வதுபோல சில புத்தகங்கள் அதன் போக்கில் நம்மை உடன் அழைத்துச் சென்றுவிடும். அப்படிப்பட்ட புத்தகமொன்றுதான் சிதம்பர நினைவுகள்.

வெறுமையான தனித்த ஒரு பொழுதில் வாசிப்பதற்காக புத்தகக்கட்டில் தேடியெடுத்து, கொஞ்சம் வாசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். நம்பமாட்டீர்கள், அமர்ந்த அதே இடத்தில் இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் வாசித்து முடித்திருந்தேன். பொதுவாக என்னைக் கவர்ந்த புத்தகத்தை மட்டுமே இப்படி வாசிப்பதுண்டு.
 

இதை கட்டுரைத் தொகுப்பு என்பதைவிட ஒரு கவிஞனின் குறுக்குவெட்டுத்தோற்ற சுயசரிதை எனலாம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. கேரளக் கவிதையுலகத்தின் முக்கியமான பெயர். தன் வாழ்பனுபவங்களை கைகளில் தெள்ளிய நீரைப்போல் அள்ளி நம் முன்னே காண்பிக்கிறார் இதில்.

தமிழாக்கம் செய்த கே.வி.ஷைலஜா மேடத்தை அடுத்தமுறை புத்தகக் கண்காட்சியில் நேரில் பார்த்து நன்றி சொல்லவேண்டும். அவ்வளவு கனகட்சித தமிழாக்கம்.

தன் தந்தையிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியது முதல், தனியறையில் இளம்பெண்ணின் அருகாமையில் ஏற்பட்ட சபலத்தில் இடுப்பில் கைவைத்ததை எண்ணி வருந்துவதாகட்டும், கையில் காசில்லாமல் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பிச்சைக்காரன் எனக்கொடுக்கும் சோறை உண்ணும்போது இவரைத் தெரிந்திருந்த பெண்ணைப் பார்த்து தயக்கத்தோடும் பசியோடும் மீதிச்சோறை உண்பதாகட்டும்... இப்படி இன்னும் எத்தனை "ஆகட்டும்" சேர்த்துக் கொண்டு சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்பனுபவங்கள் அனைத்தையும் ஒளிவுமறைவின்றி நம் கண்முன்னே வைக்கிறார்.

மழைக்காலத்தில் பாறையிடுக்கில் கசியும் நீரைப்போல எனக்குள்ளே ஜில்லென்றிருக்கிறது. எதையோ இறக்கிவைத்த நிம்மதி. எதனிலிருந்தோ விடுபட்ட ஆசுவாசம் இதைப்படித்து முடித்ததும். சில புத்தகங்களை தோன்றும்போதெல்லாம் எடுத்து வாசிப்பேன். அந்தப்பட்டியலில் இப்புத்தகமும் இடம்பிடிக்கிறது.

எனக்கு ஒரு புத்தகம் பிடிச்சுட்டா உடனே அண்ணன் ஆறுவுக்கு படிக்க கொடுப்பேன். வாசிச்சு முடிச்சதும் அவனும் நானும் அதைப்பத்தி ஆரம்பிச்சு எங்க வாழ்க்கைக்கு வந்து நிப்போம். விரைவில் அவன நேர்லபார்த்து கொடுக்கணும். நண்பர்கள் அவசியம் படிக்கவும். கண்டிப்பா பிடிக்கும். என் பரிந்துரை.


கருப்பு

சிதம்பர நினைவுகள்; வம்சி பதிப்பகம்; விலை - Rs.100;

Wednesday, January 22, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2014 – வாங்கிய புத்தகங்கள்


புத்தகம் - எழுத்தாளர் - பதிப்பகம் என்ற வரிசையில் படிக்கவும்

முழுத்தொகுப்பு:

ஆத்மாநாம் படைப்புகள் - ஆத்மாநாம் - காலச்சுவடு


நாவல்கள்:
 
1. வெள்ளை யானை - ஜெயமோகன் - எழுத்து
2. ராஜீவ்காந்தி சாலை - விநாயகமுருகன் - உயிர்மை
3. நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
4. நாயுருவி - வாமு கோமு - உயிர்மை
5. 6174 - க.சுதாகர் - வம்சி
6. எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன் - விஜயா பதிப்பகம்
7. புயலிலே ஒரு தோணி & கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம் - தமிழினி பதிப்பகம்
8. அசுரகணம் - க.நா.சுப்ரமண்யம் - நற்றிணை பதிப்பகம்
9. கூந்தப்பனை - சு.வேணுகோபால் - தமிழினி பதிப்பகம்
10. கடல்புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு பதிப்பகம்
11. காகித மனிதர்கள் - பிரபஞ்சன் - கவிதா
12. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் - தமிழினி பதிப்பகம்
13. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா - 'உ' பதிப்பகம் (டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது)
14. குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகரன் - கிழக்கு
15. இடாகினிப் பேய்களும் - கோபிகிருஷ்ணன் - தமிழினி பதிப்பகம்
16. தொட்டால் தொடரும் - பட்டுக்கோட்டை பிரபாகர் - பூம்புகார்
17. பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - பட்டுக்கோட்டை பிரபாகர் - (டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது)
18. சாயாவனம் - சா.கந்தசாமி - கவிதா
19. இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன் - விசா பப்ளிகேஷன்ஸ் 


மொழிபெயர்ப்பு நாவல்கள்: 

1. இனி நான் உறங்கட்டும் - பி. கெ. பாலகிருஷ்ணன்; தமிழாக்கம்: ஆ.மாதவன் - சாகித்திய அகாடமி
2. தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம் - தமிழில்: யூமா வாசுகி - சந்தியா பதிப்பகம்
3. தூப்புக்காரி - தமிழில்: மலர்வதி - அணல் வெளியீடு
4. தோட்டியின் மகன் - தகழி-சுந்தர ராமசாமி - காலச்சுவடு
5. பட்ட விரட்டி - தமிழில்: யூசுப் ராஜா - எதிர் வெளியீடு
6. மலையாள நாவல்கள்: குணவதி & வில்லி - தமிழில் சுரா - நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் 
7. காதலின் துயரம் - கதே; தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி பதிப்பகம்
8. எங்க உப்பப்பாவிற்கு ஒரு யானை இருந்தது - பஷீர் - காலச்சுவடு
9. மௌனத்தின் குரல் - சசி தேஷ்பாண்டே: தமிழில்:வாஸந்தி - சாகித்திய அகாடமி
10. சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் கள்ளிக்காடு / தமிழில்: கே.வி.ஷைலஜா - வம்சி
11. தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்ல - தமிழில்: சரஸ்வதி ராம்னாத்
12. தன் வெளிப்பாடு - சுநீல் கங்கோபாத்தியாய்; தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி
13. மய்யழிக் கரையோரம் - எம்.முகுந்தன்; தமிழில்: இளம்பாரதி

14. திருமணமாகாதவன் - சரத் சந்திர சட்டோபாத்தியாயா; தமிழாக்கம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15. வங்கச்சிறுகதைகள் - தொகுப்பு: அருண்குமார் முகோபாத்தியாய்; தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி
16. வானம் முழுவதும் - ராஜேந்திர யாதவ் - மு.ஞானம்
17. சிப்பியின் வயிற்றில் முத்து - போதிசத்வ மைத்ரேய; தமிழில்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18. பணீஷ்வர்நாத் ரேணு கதைகள் - தொகுப்பு: பாரத் யாயாவர்; தமிழில்: எச்.பாலசுப்ரமணியம்
19. மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் - தமிழாக்கம்: என்.எஸ்.ஜெகன்னாதன்
20. முதலில்லாததும் முடிவில்லாததும் - ஸ்ரீரங்க
21. கங்கைத்தாய் - ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா
22. அக்னி நதி - குர் அதுல்ஜன் ஹைதர்

குறுநாவல்கள்:

1. திசையெல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால் - தமிழினி பதிப்பகம்
2. இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன் - கிழக்கு

சிறுகதைகள்:

1. கு.அழகிரிசாமி கதைகள் - கு.அழகிரிசாமி - சாகித்திய அகாடமி
2. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு - பூம்புகார்
3. கனவுப்புத்தகம் - ஜே.பி.சாணக்யா - காலச்சுவடு
4. மலையாள சிறுகதைகள் - தமிழில் சுரா - நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (2 Nos)
5. நாகம்மாவா - நீல. பத்மநாபன் - கிழக்கு
6. திருஞ்ச்செங்கோடு - பெருமாள்முருகன் - நற்றிணை பதிப்பகம்
7. சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா - பாரதி புத்தகாலயம்
8. புனைவின் நிழல் - மனோஜ் - உயிர்மை
9. பறவை வேட்டை - அசோகமித்திரன் - கவிதா
10. முதல் தனிமை - ஜே.பி.சாணக்யா - காலச்சுவடு
11. பைத்திய ருசி - கணேச குமாரன் - தக்கை பதிப்பகம் (டிஸ்கவரி புக் பேலஸ்)
12. புஷ்கின் கதைகள் - தமிழில்: ரதுலன் - வ.உ.சி. நூலகம்  

கட்டுரை:

1. சிற்றிலக்கியங்கள் - நாஞ்சில் நாடன் - தமிழினி பதிப்பகம்
2. சாமானியனின் முகம் - சுகா - வம்சி பதிப்பகம் 
3. கரீபியன் கடலும் கயானாவும் - ஏ.கே. செட்டியார் - அகல்
4. தமிழின் நவீனத்துவம் - பிரமிள் - நற்றிணை பதிப்பகம்
5. சிறந்த பத்து நாவல்கள் - க. நா. சுப்ரமண்யம் - அன்னம்
6. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - சி.சு.செல்லப்பா - காலச்சுவடு
7. ஐங்குறுநூறு - செண்பகா பதிப்பகம்
8. ஆதலினால் - எஸ்.ராமகிருஷ்ணன் - விஜயா பதிப்பகம்
9. தீராக்காதலி - சாரு நிவேதிதா - உயிர்மை

கவிதை:

1. நகுலன் கவிதைத்தொகுப்பு - நகுலன் - காவ்யா
2. முதல் 74 கவிதைகள் - யுவன் சந்திரசேகர் - காலச்சுவடு
3. எங்கே அந்தப்பாடல்கள்? - ஆப்பிரிக்கப்பெண் கவிதைகள் - காலச்சுவடு
4. என் பெயர் ஜிப்சி - நக்கீரன் - கொம்பு வெளியீடு
5. நீ இப்பொழுது இறங்கும் ஆறு - சேரன் - காலச்சுவடு
6. தேர்ந்தெடுத்த கவிதைகள் - பிரம்மராஜன் - காலச்சுவடு
7. பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் - காலச்சுவடு
8. உப்புநீர் முதலை - நரன் - காலச்சுவடு
9. அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன் - காலச்சுவடு
10. மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி - புது எழுத்து
11. வேறொரு காலம் - யுவன் சந்திரசேகர் - மையம் 
12. ஒற்றை உலகம் - யுவன் சந்திரசேகர் - மையம்
13. ஏன் எனைக் கொல்கிறீர்கள்? - ராமசாமி - அகநாழிகை
14. மீண்டும் கடலுக்கு - சேரன் - காலச்சுவடு

மற்றவை:

1. டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் - 3 Nos. - சூரியன் பதிப்பகம்
2. தமிழ் நடைக் கையேடு - அடையாளம்
3. அடிப்படைத் தமிழ் இலக்கணம் - அடையாளம்

மறுபிரதி:

1. வெண்ணிற இரவுகள் - NCBH
2. காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும் - தமிழில்: யாழன் ஆதி - கருப்புப் பிரதிகள்
3. மழைப்பேச்சு - அறிவுமதி - விகடன்
4. புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி - சுதர்சன் புக்ஸ்
5. பார்த்திபன் கனவு - கல்கி - திருமகள்
வாங்கிய புத்தகங்களின் பட்டியலைவிட வாசித்த புத்தகங்களின் பட்டியல் தான் நாம் மதிப்பில் கொள்ளவேண்டியது. புத்தகக் கண்காட்சிக்கு முன்னதாக புத்தக வெளியீடு நிகழ்ச்சிகளில் வாங்கிய புத்தகங்களும் இதில் அடக்கம். கண்காட்சியில் வழங்கப்படும் 10% தள்ளுபடி சேர்க்காமல், மற்ற ஆஃபர்கள் மூலம் மட்டும் 740 ரூபாய் லாபம். :-)