Monday, July 30, 2012

அறிவோம் ஹைக்கூ :

முன் குறிப்பு :

இப்பதிவில் ஹைக்கூ என்னும் பெருங்கடலிலிருந்து கையளவு நீரை அள்ளி உங்களுக்கு காண்பிக்கிறேன். இது கடலென்றால் ஆம். கையளவு நீரென்றாலும் ஆம்தான். என்னைப்போல் ஒரு பாமரனுக்கும் புரியும்வகையில்  பல புத்தகங்களில் இருந்தும் குறிப்பெடுத்து சொல்ல முயற்சித்துள்ளேன். அட வாங்க பாஸ்... நாமும் ஹைக்கூ எழுதலாம்.

அறிமுகம் :

ஜப்பானில் தோன்றிய "ஹைக்கூ" இல்லாத உலக இலக்கிய மொழியே இல்லை இன்று.  ரெங்கா என்ற நீள்வடிவ கவிதையின் ஆரம்பத்தில் எழுதிய குறுங்கவிதையே ஹைக்கூ. "Matsuo Bashō" என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் ஹைக்கூ பிரபலப்படுத்தப்பட்டது. ஹைக்கூவின் முன்னோடி இவர். 19 ஆம் நூற்றாண்டு வரை "ஹொக்கூ" என்றழைக்கப்பட்ட இதனை ஹைக்கூ என அழைக்க ஆரம்பித்தவர் "மாஸஒகா ஷிகி".

முதலில் நாம் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். ஹைக்கூவிற்கு என்று உள்ள சில இலக்கணங்கள் ஜப்பானிய ஹைக்கூ அறிஞர்களால் கடைபிடிக்கப்பட்டது. சிலவற்றைத்தவிர மற்ற இலக்கணங்கள் யாவும் அதன்பின் எழுதுவதற்கு வசதியாக தளர்த்தப்பட்டது.

"பாஷோ", தான் எழுதிய கவிதைகளை ஹொக்கூ என அழைத்தார். அதன் அர்த்தம் ஆரம்பச்செய்யுள். ரெங்கா கவிதையின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட செய்யுள் என்பதால் இவ்வாறு அழைத்தார்.

பொதுவாக ஜப்பானியர்கள் ஹைக்கூவை மேலிருந்து கீழாக ஒரே லைனில் அச்சிடுவார்கள். ஆங்கிலத்தில் பிற மொழிகளிலும் மூன்று வரிகளை அடுக்கடுக்காக அச்சிடும் பழக்கம் உள்ளது.

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் முன்னோடிகள் என பாஷோ , யோஷோ பூஸான், கொபயாஷி இன்ஸா மற்றும் ஷிகி இந்நால்வரை குறிப்பிடலாம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... பல வார்த்தைகள் கொண்டு விளக்க வேண்டிய ஒரு காட்சியை அல்லது உணர்ச்சியை மூன்றே வரிகளில் அடக்குவதென்பது எத்தனை கஷ்டம்.  ஹைக்கூ இதை செய்து காட்டுகிறது. ஹைக்கூவின் வெற்றியே அதில்தான் உள்ளது.

உதாரணத்திற்கு ஒரு ஹைக்கூ :

அழகான பட்டம்
வானேறிவிட்டது
பிச்சைக்காரன் குடிசைமேல்

ஹைக்கூவின் விதிகள் :

1 . நேரடியாக உணர்ந்த அனுபவம். அதாவது ஒரு ஹைக்கூ கவிதை படிக்கும்போதே அந்த சம்பவம் நம் கண்முன்னே நிகழ்வதுபோல இருத்தல் வேண்டும்.

2 . எவ்வித வார்த்தை ஜாலங்களும் இருக்க கூடாது. முக்கியமாக நம் உவமைகளோ வர்ணனைகளோ கண்டிப்பாக இருத்தல் கூடாது.

3 . மூன்றாவது வரியில் ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருப்பது போல் வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஹைக்கூ.

தோட்டத்தை விற்றதும்
பறவைகள் கானம்
வேறாக ஒலிக்கிறது

இந்த ஹைக்கூவில் நாம் உணர்வது தோட்டத்தை விற்ற உரிமையாளன் ஒருகணம் தன தோட்டத்தை திரும்பி பார்க்கிறான். அதுவரை இனிமையாக ஒலித்த பறவைகள் கானம், தோட்டத்தை விற்றபின் அவன் மனத்தில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. மூன்றாவது வரியில் ஒரு ட்விஸ்ட் இருப்பதை நாம் காணமுடியும் இக்கவிதையில்.

4 . 5-7-5 என்றவாறு அசைகள் (Syllable) கொண்ட மூன்று வரிகள் இருக்க வேண்டும். ஆக... மொத்தம் 17 அசைகள் இருக்கவேண்டும் என்பது விதி. நான்கு வரிகளில் ஹைக்கூ எழுதுவது தவறில்லை. முடிந்த அளவில் மூன்று வரிகளில் எழுதுவது நல்லது.

5 . பருவ காலங்களில் ஒன்றை குறிப்பிட வேண்டும். இதை ஜப்பானிய மொழியில் Kigo (கிகோ) என்றழைப்பார்கள். அதாவது காலை, மாலை, மழை, வெயில், வசந்தகாலம் இப்படியாக... சில மறைமுக குறிப்பால் கூட காலத்தை உணரச்செய்யலாம். உதாரணம் : கானல்நீர் - கோடைகாலம்; வெள்ளம் - மழைக்காலம்; சருகுகள் - இலையுதிர்க்காலம்; (இந்த விதியை தளர்த்திக் கொள்ளலாம். நவீன ஹைக்கூ அறிஞர்கள் காலத்தை குறிப்பதை விட்டுவிட்டார்கள்)

ப்ரீயா விடுங்க. இந்த விதிகளில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பெரும்பாலான விதிகளை நவீன ஜப்பானிய ஹைக்கூ அறிஞர்களே கைவிட்டு நாளாகிறது. ஆனால் முதல் மூன்று விதிகள் இருக்கும்படியாக எழுதுவது நல்லது.

முக்கியமா ஒரு விசயம்... புரட்சிக்கருத்தோ நம் உருவகமோ ஹைக்கூவில் இருக்கவே கூடாது. கீழே வரும் மிகப்பிரபலமான குறுங்கவிதையை கவனியுங்கள்

எத்தனைபேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்

ஆரம்ப காலத்தில் இக்கவிதையை ஹைக்கூ என நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த கவிதை நிச்சயமாக ஹைக்கூ கிடையாது. இந்த கவிதையில் கடைசி வரியான "சேரிக்குள் தேர்" என்பதில் புரட்சிக்கருத்து ஒளிந்திருப்பதை காணலாம். புரட்சிகர கருத்து கலந்திருப்பதால் இது ஹைக்கூ என்ற அந்தஸ்தை இழக்கிறது.

"சிறிய கவிதையில் கவிஞன் வாசகனை ஒரு மலையுச்சிக்கு ஒரு கழுகு தன் குஞ்சை எடுத்துச் செல்வது போல அழைத்துச்சென்று, அங்கே தொபுக் என்று போட்டு விடுகிறான்! கற்பனை உள்ள வாசகன் பறக்கிறான். இல்லாதவன் விழுந்து சாகிறான்" என்று "ராபர்ட் ப்ளை" கூறியதுபோல ஹைக்கூ என்பது வாசிப்பவனை எழுதியவன் உணர்ந்த அதே விசயத்தை கண்முன்னே நிகழ்த்தி உணர செய்கிறது.

அடுத்த பாகத்தில் பிரபல ஹைக்கூ கவிஞர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை காணலாம்.

Friday, July 20, 2012

காதல்மொழி

முத்தம் கொண்டே முடிப்பது
என முடிவு
உனக்கும் எனக்குமான
ஊடல் விளையாட்டை
****************************************************************
கண்டதும் காதல் சாத்தியமே
என்பதை
உனைக்காணும் வரை
நம்பவில்லை நான்
****************************************************************
ரணப்படுத்திய தனிமையை
குத்தி கிழித்தேன் உன் நினைவுகளால்...
கைகள் எங்கும்
கடந்த காலத்தின்
காதல் குருதி கசிந்திருந்தது
****************************************************************
 நீ முத்த வங்கி... நான் ஒரு முத்த வாங்கி...
****************************************************************
அவள் குறள் வாசித்தாள்... அவளின் குரல் இனித்தது 
****************************************************************
விலகிச்சென்று விட்டாய்...
கதறி அழுகிறது
கனவில் நாம் பெயர் சூட்டி
வளர்த்த குழந்தை
****************************************************************
ஒற்றை முத்தத்தில்
வீழ்ந்து போகிறது
வலிமையற்ற நம் ஊடல்
****************************************************************
என் அறை முழுவதும்
படர்ந்து கிடக்கிறது
உனை நினைத்து சிந்திய
கண்ணீரின் ரேகைகள்
****************************************************************

மழைப்பொழுது

மழைக்குப் பின்னர்
என் அறையெங்கும்
இரைந்து கிடக்கிறது
உன் சுவாசம்
****************************************************************
பூமி நோக்கிய பயணத்தில்...
சற்றே இளைப்பாறுகிறது
இலைமேல் விழுந்த மழைத்துளி
****************************************************************
தேங்கிய நீரை
கடலாக்கி கொண்டிருந்தது
ஓடம்போல மிதக்கும்
இலையொன்று...
****************************************************************
தூவானம் தூறிச் சென்ற
மழைத்துளிகள் யாவும்...
பிரதிபலிக்கிறது
கொஞ்சம் வானத்தை
****************************************************************
அடைமழையில்
தனித்து குளியல்
என்போன்றே பாவப்பட்ட மரம்
****************************************************************
தரையில் விழுந்து மரணித்த துளிகளுக்காய்
மௌன அஞ்சலி செய்கிறது..
உன்மேல் விழுந்து
புனிதம் பெற்ற மழைத்துளிகள்
****************************************************************