Friday, April 26, 2013

உற்றுக்கேட்ட விசும்பல்

தென்னகங்களில் பரவிவரும் நிலச்சீட்டு முறைபற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். மாதம் மாதம் கொஞ்சம் பணத்த கட்டி வந்தா முடிவில நம்ம பேர்ல சொத்து ஒன்னு இருக்குமேன்னு பணம் கட்டிவந்தேன். சீட்டும் முடிந்து பத்திரப்பதிவிற்காக அழைத்திருந்தார்கள். ஆபிஸ்ல வழக்கம்போல சில முன்னேற்பாடுகள முடிச்சிட்டு லீவ் வாங்கி ஊருக்கு கிளம்பியாச்சு.

பத்திரப்பதிவு அலுவலகம். வாசலுக்கும் அலுவலகத்திற்கும் கையில் மஞ்சள் பைகளை வைத்துக் கொண்டு அலையும் ஏஜென்ட்கள், பதிவிற்காக வந்து வெகுநேரம் காத்திருந்த களைப்பில் எதிரே உள்ள டீக்கடையில் இந்தியப் பொருளாதாரத்தை விவாதித்துவிட்டு சில்லறை தேடியவர்கள், வணக்கம் வைத்துக் கொண்டே ஒரு கையில் அசால்ட்டாக பைக்கில் வலம்வந்த அரசு அதிகாரிகள் என அதே கிளிஷே காட்சிகள்.

என்னுடன் சேர்த்து பணம் கட்டிய முப்பத்திச்சொச்ச பேரும் சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வீடு திரும்ப காத்திருந்தாங்க. இந்த இடைவெளியில் நீ இன்னார் மகன்தான... பேரன்தானன்னு அடையாளம் கண்டுபிடித்து பேசிய சில உறவுமுறைகள். இப்படிப் போய்கொண்டிருந்த நேரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தபடி இரண்டு வெள்ளைவேட்டி பல்சர்களைத் தொடர்ந்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. பல்சரில் இருந்து இறங்கி இருவரும் கைத்தாங்கலாக ஆட்டோவிலிருந்து ஒரு வயதான மூதாட்டியை இறக்கினர். பார்க்க அந்த பாட்டிக்கு எப்படியும் 70 வயசு இருக்கும். பழுப்பேறிய எட்டு முழ சேலைய உடம்புமுழுக்க சுத்திவிட்ருந்தாங்க. இவங்களுக்காகவே காத்திருந்த இரண்டுபேர் வெள்ளை வேட்டிகளிடம் தங்களது க்ளோசப் புன்னகையைக்காட்டி டீக்கடைக்குத் தள்ளிச்சென்றனர்.

அதன்பின்... வாசலுக்கும் அலுவலகத்துக்கு உள்ளேயுமாய் ஒரு வெள்ளைவேட்டி மனிதர் நடந்துகொண்டிருக்க, இன்னொருவர் டீ கிளாஸோடு 'இந்தா குடி. எவ்வளவு நேரமாவுமோ தெரில. பட்டினியா கெடந்து தொலையாத' என்றபடி பாட்டிய நெருங்கினார். பாட்டி எந்த சத்தமும் இல்லாம முந்தானையை உருவி கையில் பிடித்தபடி டீ க்ளாஸை உப் உப் என ஊதிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தார்.

இதற்குள்ளாக எங்களோட ரியல் எஸ்டேட் ஏஜென்ட் பக்கத்துல வந்து 'தம்பி...  பெரியவுக (ரிஜிஸ்ட்ரார்) வர நேரமாட்டு இருக்கு. எங்கனயோ விசிட் போயிருக்காராம்' என காதில் ஓதினார். அதாவது லேட்டாகும் வீட்டுக்கு சீக்கிரம்போக ஆசைப்படாம உட்காருன்னு சொல்லாம சொல்லிட்டுப்போனார். கொஞ்சம் ஏமாற்றம்.

ஊருக்கு கிளம்பிவரும் அவசரத்தில் சார்ஜ் போடாததால் மொபைல் ஏற்கனவே பேட்டரி-லோ என பல்லிளித்திருந்தது. பொழுதைப் போக்க வேற வழி இல்லாததால அக்கம்பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிருந்தேன். பக்கத்துல உட்காந்திருந்த பெண்கள் சமீபத்துல தற்கொலை பண்ணியவர் ஒருத்தர மறுபடியும் உயிர்கொடுத்து நடமாடவச்சு சரியா அப்ப வாயத்தொறந்து விசத்தை ஊற்றிக்கொண்டிருந்தனர். கவனிக்க முடியாததால் என் கவனம் அந்த பாட்டியின் மேல் விழுந்தது.

அந்த பாட்டி வந்ததிலிருந்து யாருகிட்டயும் பேச்சு கொடுக்கல. அப்பப்ப அந்த வெள்ளை வேட்டிகள் வந்து ஏதோ சொல்வதும் போவதுமாக இருந்தனர். அதற்கும் அந்த அம்மா எந்த சலனமும் காட்டவில்லை. வெள்ளைவேட்டிகள் இருவரும் அந்த அம்மாவின் மகன்கள் என்றும், இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே விசைத்தறி போட்டு தொழில் செய்வதாகவும் சொன்னார்கள். சின்னவயசுலயே கணவனை இழந்தபின்னும் பூர்வீக வயல்வெளிகளை குத்தகைக்கு விட்டும், சின்ன அளவில சொந்தமா விவசாயம் பண்ணியும் எந்தக் குறையுமில்லாம வளர்த்திருக்காங்க. குழந்தைகள கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பிரயோஜனம்?

இப்ப அவங்க கூட்டி வந்திருக்கறதே எல்லா சொத்தையும் வித்து சரிபாதியா பிரிக்கத்தானாம். அந்த அம்மா கடைசிவரைக்கும் இது பூர்வீக சொத்து. விற்க வேண்டாம் ஆளுக்கு சரிபாதியா பிரிச்சுக்கோங்கன்னு சொல்லிருக்காங்க. தொழில் பண்றது வேற இடத்துல, அதனால இதெல்லாம் கவனிக்க முடியாது அப்புறம் சொத்தையும் அந்த அம்மா உயிரோட இருக்குறப்பவே பிரிக்கனும்ன்னு பசங்க ஐடியா. அந்த பாட்டியோட பேச்சு எடுபடல. (தற்கொலை டாபிக் முடிந்தபின் பாட்டி பற்றி அந்த பெண்கள் பேசியதை கவனித்ததிலிருந்து).

பாட்டி அப்பப்ப கீழே தரையிலோ அல்லது விட்டத்திலோ பார்வையை நிலைகுத்தி செலுத்திக்கொண்டிருந்தார். ஒரே ஒருமுறை மட்டும் 'ராசு...' என சின்ன மகனை அழைத்து டீ வரவழைத்தார். சொத்து கைமாறுவதில் அந்த அம்மாவுக்கு விருப்பமில்ல. அதனால இங்க நடக்குற... சுத்தியிருக்குற எதையும் அந்த அம்மா பொருட்படுத்தவே இல்ல. பலியாகப்போகும் ஆட்டிற்கு கொடுக்கப்படும் கடைசிநேர மரியாதைகள் மகன்களிடமிருந்து. பத்திரப்பதிவு முடிஞ்சு யார் வீட்டுக்கு பாட்டிய கூட்டிட்டு போறதுன்னு காதுபட பேசினார்கள். இந்த வாரம் சின்னமகன் வீடு என முடிவானது.

ஒருவழியா 12 மணியளவில் விசிட் முடிந்து ரிஜிஸ்ட்ரார் திரும்பினார். அவர் வந்ததுமே அலுவலகம் பரபரப்பானது. எங்கிருந்தோ ஏஜென்ட்கள் திபுதிபுவென வாசலுக்கு விரைந்து ஓடினார்கள். வெள்ளை வேட்டி மனிதர்கள் செல்வாக்கானவங்க போல. முதல் பதிவா அவங்கள வரச்சொன்னாங்க. ரிஜிஸ்ட்ரார் செக் செய்து முடித்து அந்த அம்மாவோட ரேகை வாங்குவதற்காக பத்திரங்கள் வெளியே வந்தது. கிட்டத்தட்ட பாட்டியின் விரலை ஸ்டாம்ப் பேடில் தோய்த்து பத்திரத்தில் அழுத்தினார்கள். எல்லாம் முடிந்தது. தலைமுறை தலைமுறையாக வந்த சொத்து சிலநிமிடங்களில் கைமாறிப்போனது. அதுவரை எந்த சலனமும் இல்லாமல் இருந்த அந்த பாட்டியின் உடல் குலுங்க ஆரம்பித்தது. விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தார்.

மகன்கள் எதுவும் பேசவில்லை. புடவைத்தலைப்பால் முகத்தை மறைத்தபடி அழுதுகொண்டிருந்தார் பாட்டி. மகன்கள் மட்டுமில்லாம சுற்றி இருந்த எல்லாரும் அமைதியா வேடிக்கை (மட்டுமே) பார்க்கமுடிந்தது. அந்த அம்மாவ சமாதானப்படுத்த யாருக்குமே தெம்பில்ல. அழுகை கொஞ்சம் ஓய்ந்தது. ஒருத்தர் கைகளையும் இன்னொருத்தர் கால் பக்கமும் பிடித்தவாறு ஏற்றி அமரவைக்க... அந்த பாட்டியைப்போலவே குலுங்கியபடி புறப்பட்டது ஆட்டோ. சிலநிமிடங்களுக்கு அங்க வேற எந்த சத்தமும் கேட்கல.

"எல்லாம் சீட்ட எடுத்துட்டு வெரசா வரிசைல வாங்க. ஐயா கூப்பிடுதாக..." என அமைதியை ஏஜென்ட் குரல் உடைத்தது. முப்பத்திச்சொச்ச பேரும் வாசல்நோக்கி விரைந்தோம். வரிசையில் நின்ற என் மனதில் மகுடேசுவரனின் இந்தக்கவிதை ஓட ஆரம்பித்தது.

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை


- மகுடேசுவரன்

14 comments:

  1. பாட்டியின் நிலைமை மனதை கலங்க வைத்தது...

    நல்ல கவிதை... வரிகள் உண்மை...

    ReplyDelete
  2. மிகவும் அழுத்தமான உணர்வுகளை பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை!!

    ReplyDelete
  3. எங்க பூர்வீக வீட 1 வருஷத்துக்கு முன்னாடி தான் மாமாக்கள் வித்தாங்க , அந்த கனமான உணர்வு , இத படிக்கும் போது recap ஆகுது :(

    @gollum

    ReplyDelete
  4. அந்த பாட்டியைப்போலவே குலுங்கியபடி புறப்பட்டது ஆட்டோ//////////// நைஸ்.....

    ReplyDelete
  5. மிகுந்த வலிமிகுந்த தருணங்களின் ஆழமான பதிவு, இம்மாதிரியான நேரங்களில் எனக்கு இரு உணர்வுகள் தோன்றும் நம் பெற்றோரை நாம் நன்றாக கவனித்தோமா என்ற கேள்வியும், இவ்வேளைகளில் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத்தனமும் பிரியா ஷரவணன்

    ReplyDelete
    Replies
    1. உண்மை. எனக்கு இரண்டாவது அதிகம் தோன்றியது.

      Delete
  6. கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.கொஞ்சம் இங்கே வந்துகருத்து சொல்லுங்களேன்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு ! படிப்பவர்களை பாட்டியின் மனநிலையை கண் முன் வரவழைத்தது உங்கள் உரைநடை !! வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...